Is Jesus Our Example?

இயேசு நமது முன்மாதிரியா?

21-07-2026
Is Jesus Our Example?

இயேசு நமது முன்மாதிரியா?

21-07-2026

விக்கிரகாராதனை என்றால் என்ன?

What Is Idolatry?

பொதுவாக, மக்கள் ‘விக்கிரகாராதனை’ என்ற வார்த்தையைக் கேட்கும்போது, அநேக காரியங்கள் அவர்கள் சிந்தனையில் வருகின்றன. சிலர், விக்கிரக சிலைகளுக்கு முன்னால் வணங்கும் பழங்காலத்து சடங்குகளை கற்பனை செய்கிறார்கள். மற்றவர்கள், மனிதர்களை முன்னிறுத்தும் ஒரு ரசிகர்களாக  தங்களுக்கு விருப்பமான நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் அல்லது இசைக்கலைஞர்களை எப்படி “ஆராதிக்கிறார்கள்” என்பதை நினைவு கூறுகிறார்கள். இன்னும் சிலர், மனதை ஆளுகை செய்யும் ஒரு உந்து சக்திக்கான உருவகமாக இந்த வார்த்தையை பயன்படுத்துகிறார்கள்.

எனவே, விக்கிரகாராதனை என்றால் என்ன? சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், சிருஷ்டிகரை தொழுதுகொள்வதற்கு பதிலாக சிருஷ்டிகளை  வணங்குவதே விக்கிரகாராதனையாகும்.

 வேதத்தில் இதைக் குறித்து தேவன் ஏன் இவ்வளவு அக்கறை காட்டுகிறார்? எளிமையாக சொல்ல வேண்டுமானால்,தேவன் தமது  ஆராதனையை குறித்து கருத்துள்ளவராய் இருக்கிறபடியால், அவர்  விக்கிரகாராதனையைக் குறித்தும் அக்கறை கொள்ளுகிறார்.

இந்தக் கருத்து  தற்காலத்தில் வாழ்பவர்களுக்கு  சில நேரங்களில் கடினமாக காணப்படலாம், ஏனெனில் அவர்கள், தன்னை எல்லாரும் ஆராதிக்க வேண்டும் என்று தேவன் விரும்புவதால் அவரை  ஒரு சுயநலவாதியாக நினைக்கலாம். தேவன் படைத்தவராக இல்லாமல் அவர்  ஒரு படைப்பாக இருந்திருந்தால் இந்தக் கூற்று உண்மையே. ஆனால் மனிதர்களாகிய நாம் அவரை ஆராதிக்கும்படியாகவே தேவன் நம்மை படைத்தார். இதுவே சரியானது. ஏனென்றால் தேவன் மட்டுமே ஆராதனைக்குரியவர் என்பதால் இந்தக் கூற்று சரியானது. ஆனால்,  நாம் இதை கொஞ்சம் நேர்மாறாக சிந்திப்போமானால், தேவன் தம்முடைய மகிமையையும் கனத்தையும் ஆதரிக்கவோ அல்லது பாதுகாக்காமலோவிட்டால், அவர் தேவனாகச் செயல்படவில்லை என்று அர்த்தமாகிவிடும். பெரும்பாலும், மக்கள் தேவனை ஒரு மனிதனாக (படைப்பின் ஒரு பகுதி) பார்க்கிறார்கள், அதே நேரத்தில் படைப்பை தேவனாக (ஆராதனைக்கு உரியதாக) உயர்த்துகிறார்கள். தாழ்ந்த சிந்தனையோடுகூட, படைப்பை உயர்த்துவதும் படைத்தவரை  தாழ்த்துவதும் பொருத்தமற்ற செயலாகும். அதுவே விக்கிரகாராதனையாகும்.

அப்போஸ்தலனாகிய பவுல் விக்கிரகாராதனையை ஒரு பண்டமாற்று முறை என்று விவரிக்கிறார். படைத்த தேவனுக்கு மகிமையை செலுத்துவதற்குப் பதிலாக, அவரால் படைக்கப்பட்ட சிருஷ்டிகளின் சாயலுக்கு மகிமையை செலுத்துவதினாலேயே என்கிறார். ஆராதிக்கிறவர்கள் ” தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி சிருஷ்டிகரை தொழுது சேவியாமல் சிருஷ்டிகளை தொழுது சேவித்தார்கள். அவரே என்றென்றைக்கும் ஸ்தோத்தரிக்கப்பட்டவர் ஆமென்” (ரோமர் 1:25) என்பதற்கேற்றார் போல் செயல்படுகிறார்கள்.

தேவனுடைய மகிமையை விக்கிரகங்களுக்காக மாற்றியமைப்பது, தேவனுக்கான கனத்தை மனித தராசில் வைத்து அளவிடுவது போன்றது. அவருடைய மகிமையை (அவருடைய எல்லையற்ற கனம், மதிப்பு மற்றும் சாரம்) காண்பதற்குப் பதிலாக, ஆராதனை செய்பவர்கள் அவரைப் படைக்கப்பட்ட எதையையோ விட மதிப்பு குறைந்தவராக அளவிடுகிறார்கள். மனிதனின் இந்த ஒழுங்கின்மையே முட்டாள்தனத்தின் உச்சக்கட்டமாகும். ஒரு யானையையும் ஒரு சிறு  இறகையும் தராசில் வைத்துப் பார்த்து, இறகு அதிக எடை கொண்டது என்று ஒருவன் முடிவெடுப்பதாகக் கற்பனை செய்து பாருங்கள். நிச்சயமாக, அத்தகைய நபர் உண்மைக்கு வெகு தூரத்தில் இருக்கிறான்.  யாராவது ஒருவர் எப்படி இவ்விதமாக நினைக்க முடியும்? தேவனை ஒரு விக்கிரகத்திற்கு ஒப்பாக நாம் அளவிட முடியுமா? தேவனைப் பற்றிய சத்தியத்தை பொய்யாக மாற்றினால் மட்டுமே இது சாத்தியமாகும். தேவன் யார் என்று அவர் நமக்கு வெளிப்படுத்தியதை நாம் மட்டுப்படுத்தும் போது, நாம் தேவனைப் பற்றிய தவறான வழியை தேர்ந்தெடுக்கிறோம் (ரோமர் 1:18).

விக்கிரகாராதனையிலிருந்து நம்மை பாதுகாத்து மற்றும் தேவனை மெய்யாய் ஆராதிக்க, கர்த்தர் தமது வார்த்தையின் மூலமாக நமக்கு அறிவுறுத்துகிறார்:

“உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே. என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்.” (யாத்திராகமம் 20:2-3)

நமக்கு நன்றாக தெரிந்த இந்த வசனம், பத்து கட்டளைகளின் தொடக்கத்தில் ஒரு நோக்கத்திற்கென்றே வைக்கப்பட்டுள்ளது. தேவனுடைய மேன்மையான இடத்தை ஆக்கிரமிக்கும்படியாக யாரையும் அல்லது எதையும் நாம் அனுமதிக்கக்கூடாது.

ஆனால் வேதத்தில் நாம் மீண்டும் மீண்டும் மனித வாழ்வில் எதைக் காண்கிறோம்? யாத்திராகமம் புத்தகத்திலேயே, எகிப்திலிருந்து மீட்கப்பட்ட ஜனங்கள் தங்களிடத்தில் உள்ள பொன்னைக் கொண்டு ஒரு விக்கிரகத்தை உருவாக்கி, அதை வணங்கினார்கள் (யாத்திராகமம் 32). பின்னர், ராஜாவாகிய யெரொபெயாம் தனது அதிகாரம் பறிபோய்விடுமோ என்ற பயத்தினால், இதே விக்கிரகாராதனையைப் பின்பற்றி, தனக்கென்று ஒரு ஆராதனை முறைமையை உருவாக்கினான். தேவனுடைய மகிமையை மாற்றியமைத்து, அவர்கள் தங்கள் சொந்த கையின் கிரியைகளை வணங்கினார்கள்: “இஸ்ரவேலே, உன்னை எகிப்து தேசத்திலிருந்து புறப்படபண்ணின உங்கள் தெய்வங்கள் இவைகளே” (1 இராஜாக்கள் 12:28). இவ்விதமான சிறந்த உதாரணங்கள், விக்கிரகாராதனைக்கு எதிராக நம்மை எச்சரிக்கும் பிரகாசமான ஒளிவிளக்குகளாக நமக்கு முன்பாக நிற்கின்றன. தேவன் விக்கிரகாராதனையை வெறுக்கிறார், ஏனெனில் அவர் தம்முடைய மகிமையை வேறொருவருக்கும் கொடார். அவர் தமது மகிமையை விரும்புகிறார் ஏனெனில் அதுவே நமக்கு நன்மையானது.

முதல் கட்டளை மற்ற ஒன்பது கட்டளைகளுக்கும் அடித்தளம் என்று நம்மில் பலருக்குத் தெரியும்; மற்ற கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமல் போனால் உண்மையான தேவனிடமிருந்து விலகி விக்கிரகத்தை சேவிப்பதற்கு சமமாகும். இது விக்கிரகாராதனை உண்மையில் எவ்வளவு ஆபத்தானது என்ற பரந்த சிந்தனை போக்கை நமக்கு வெளிப்படுத்துகிறது.  விக்கிரகாராதனையை குறித்து ஒரு சிலைக்கு முன்னால்  நாம் குனிந்து வணங்குவதைப் போல் நினைக்கலாம், ஆனால் அது உங்களிடம் இல்லாத மற்றும் மற்றவர்களிடம் இருக்கும் ஒன்றை வாஞ்சிப்பதற்கு சமமாகும் ( யாத்திராகமம் 20:17).

நாம் கிறிஸ்தவர்களாக மாறும்போது, விக்கிரகங்களை விட்டு விலகி ஜீவனுள்ள தேவனை சேவிக்கிறோம் (1 தெசலோனிக்கேயர் 1:9). ஆனால் இது நமது போராட்டத்தின் முடிவு அல்ல. நாம் தொடர்ந்து விக்கிரகங்களை விட்டு விலக வேண்டும் (1 கொரிந்தியர் 10:14), நம்மையும மற்றவர்களையும் விக்கிரகாராதனையிலிருந்து பாதுகாக்கும்படி நாம் உழைக்க வேண்டும் (1 யோவான் 5:21).

அப்போஸ்தலனாகிய பவுல் நமக்கு ஒரு பொருத்தமான மற்றும் சவாலான உதாரணத்தை காண்பிக்கிறார். அப்.பவுல் கிரேக்கு தேசத்தைச் சுற்றி நடந்தபோது, தன்னுடைய உடன்  கூட்டாளிகள் வரும் வரை காத்திருந்த அவர், அந்த இடங்களை சுற்றிப் பார்த்தார். அங்கிருந்த கட்டிடக்கலையால் ஈர்க்கப்படுவதற்குப் பதிலாக, அங்கு பரவியிருந்த விக்கிரகாராதனையைக் கண்டு அவர் எரிச்சலடைந்தார் (அப்போஸ்தலர் 17:16). பவுல் தேவனுடைய மகிமையின் மீது கொண்டிருந்த மிகுந்த பக்திவைராக்கியத்தால், தேவனுக்கு கொடுக்கப்பட வேண்டிய மகிமை கொடுக்கப்படாததால்  அவர் உண்மையில் கோபமடைந்தார். அதனால், அவர் வெளியே சென்று தன்னைச் சுற்றியிருந்த அனைவருக்கும் நற்செய்தியை பிரசங்கித்தார்.

தேவனுடைய கனத்தின் மீதான இந்த அன்பே, விக்கிரகாராதனைக்கு எதிரான ஒரு சிறந்த பாதுகாப்பாகும். எனவே, எல்லாவற்றையும் விட தேவனுடைய மேன்மையான மகிமையையே நாம் அதிகம் சிந்திக்க வேண்டும். அவருடைய மாறாத உண்மைத்தன்மை, குறையாத அன்பு,  கிருபையின் உச்சம் , மாற்ற முடியாத நீதி, மாசற்ற நன்மை, குறைசொல்ல முடியாத ஞானம் மற்றும் மாறாத குணாதிசயம் ஆகியவற்றை குறித்து தியானியுங்கள். இப்படிப்பட்ட தேவனைப் போல் வேறொருவர் உண்டோ? கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக, உங்களை தெரிந்துகொண்டு உங்களை நேசிக்கும் தேவன் இவர்தான் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.

இந்தக் காரியங்களில் தேவன் நமக்கு உதவி செய்யும்படியாகவும், அவருக்கு கொடுக்க வேண்டிய கனத்தை செலுத்தவும், அதை சரி செய்யும்வரை மற்ற அனைத்தும் நமக்கு கடினமானதாகிவிடும் என்பதை நாம்  உணரவும் தேவனிடத்தில் ஜெபிப்போம்.

இந்தக் கட்டுரை முதலில் லிகோனியர் மினிஸ்ட்ரீஸ் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.

எரிக் ரேமண்ட்

எரிக் ரேமண்ட்

ஆசிரியர்: Rev. Erik Raymond - Rev. எரிக் ரேமண்ட் என்பவர் மாசசூசெட்ஸில் உள்ள வாட்டர்டவுனில் உள்ள மீட்பர் ஐக்கிய திருச்சபையின் (Redeemer Fellowship Church) சபையின் மூத்த போதகராவார். அவர் 'Chasing Contentment' உள்ளிட்ட பல புத்தகங்களை எழுதியுள்ளார்.