
விக்கிரகாராதனை என்றால் என்ன?
23-07-2026ஜெபக் கூடுகைகளின் வல்லமை
2 கொரிந்தியர் 1:11 ல் அழகான வசனம் ஒன்று உள்ளது: “…நீங்களும் விண்ணப்பத்தினால் எங்களுக்கு உதவிசெய்யுங்கள்.”
இந்த அதிகாரத்தின் பின்னணி என்னவென்றால் கிறிஸ்தவ வாழ்விலும் ஊழியத்திலும் உள்ள பாடுகள் பற்றியது. பவுல் மற்ற நிருபங்களைப் போல் அல்லாமல், வித்தியாசமான முறையில் இந்த நிருபத்தை தம்முடைய வாசகர்களுக்கு எழுதுகிறார். “இரக்கத்தின் பிதா” மற்றும் “சகலவித ஆறுதலின் தேவனிடமிருந்து” தாம் பெற்ற ஆறுதலை பற்றி இங்கு பேசுகிறார் (2 கொரி 1:3).
தாங்குவதற்கு திராணிக்கும் மேலான சோதனைகளின் நடுவில் அவர் தேவனால் பலப்படுத்தப்பட்டார். பவுல் முற்றிலும் விரக்தியின் விளிம்பில் காணப்பட்டார், தன் எல்லையை அடைந்திருந்தார். தனது உயிர் போய்விடுமோ என்று கூட அவர் நம்பிக்கை இழந்ததாக கூறுகிறார். ஒரு கிறிஸ்தவர் இவ்வாறு பேசுவது பொருத்தமற்றது என்று சில நினைக்கலாம் ஆனால் அப்போஸ்தலர்களோ நம்மைப் போல மிகவும் யதார்த்தமானவர்கள்தான்.
ஒவ்வொரு கிறிஸ்தவரின் வாழ்விலும், “நான் என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை மற்றும் இதை என்னால் கடந்து போகமுடியுமோ என்பதும் அறியவில்லை” என்று சொல்வதற்கு வழி நடத்தக்கூடிய அநேக கடினமான பாதைகள் இருக்கின்றன. இரத்தப் போக்கினால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை கிறிஸ்து சந்திப்பதை நினைவில் கொள்ளுங்கள்: பல வருடங்களாக அவள் போராடிக் கொண்டிருக்கிறாள், அநேக மருத்துவர்களை பார்த்திருக்கிறாள், ஆனாலும் அவளின் நிலை மோசமானதாகிக் கொண்டிருக்கிறது. அந்த நேரத்தில் தன் வாழ்க்கையின் மீது அவள் விரக்தி அடையவில்லையா?
நம்முடைய சக கிறிஸ்தவர்களின் போராட்டங்களை பற்றி நினைத்துப் பாருங்கள்: தாங்க முடியாத துக்கத்துடன் போராடுபவர்கள், திருமணம் குறித்த நம்பிக்கைகள் ஒருபோதும் நிறைவேறாதவர்கள், குணமடைவதற்கான எந்த அறிகுறியும் தென்படாதபடி நோய்வாய்ப்பட்ட உறவினர்களைக் கொண்டவர்கள், தங்களுக்குப் பிள்ளைகளைத் தரும்படி கடவுளிடம் ஜெபித்தும் எந்தப் பயனும் இல்லாதவர்கள். அப்போஸ்தலனாகிய பவுல் மிகுந்த மனவேதனையை உணர்ந்ததால், தன் இருதயத்தில் மரண வேதனையை உணர்ந்தார்.
பவுல் தனது வாழ்வில் தான் சகித்துக் கொண்டிருக்கும் பாடுகளை பற்றி சிந்தித்து கொண்டு இருக்கையில் அவர் கூறுகிறார் இந்த காரியங்கள் தேவனுடைய இறையாண்மையுள்ள கட்டுப்பாட்டுக்குள் அப்பாற்பட்டது அல்ல என்று. இந்த பாடுகள் தற்செயலாக நடந்தவைகள் அல்ல, மாறாக நம்மை நாமே நம்பாமல் முழுவதுமாக மரித்தோரை எழுப்புகிற தேவன் மீது நம்பிக்கை கொள்ளும்படிக்கு இவைகள் நடந்தேறுகின்றன.
பவுலைப் பொறுத்தவரை, கிறிஸ்தவ ஊழியத்தின் அழுத்தங்களும் சிரமங்களுமே அவரைத் தாங்க முடியாத நிலைக்குத் தள்ளின. அந்த இக்கட்டான நிலையில்தான், தனியாக அதைச் சமாளிப்பதற்கான ஆற்றல் தன்னிடம் இல்லை என்பதை அவர் உணர்ந்தார்; மாறாக, கடவுளின் பலத்தைச் சார்ந்திருப்பதன் மூலம் அவரால் அதைச் சமாளிக்க முடிந்தது.
நம்முடைய சுயத்தை சார்ந்து கொள்ளும் படியான தொடர்ச்சியான இவ்விதமான சோதனைகள் பற்றி நாம் எச்சரிக்கையாக இருக்கிறோமா என்பது எனக்கு தெரியவில்லை. அனேக வழிகளில் கிறிஸ்தவ வாழ்விற்கான மிகப்பெரிய போராட்டம் இது. நம் சுயபுத்தியின்மேல் சாயாமல், முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிரு, (நீதி 3:5) என்பதை ஒவ்வொரு நாளும் நினைவு கூறுவதற்கான தொடர்ச்சியான போராட்டம் இது. போதுமான அளவு முயற்சி செய்தாலோ அல்லது போதுமான மனவுறுதியைத் திரட்டிக்கொண்டாலோ என்னால் அதைச் செய்துவிட முடியும் என்ற பொய்யை நான் நம்பத் துவங்குகிறேன்.
சுயத்தை நம்புவது, நமது விசுவாசத்தை அழிக்கும்.
கிறிஸ்த வாழ்வில் சந்தேகம் என்பது மாபெரும் பிரச்சனை அல்ல, சில நேரங்களில் சந்தேகிப்பது என்பது ஆரோக்கியமான ஒன்றாகவும் இருக்கிறது. அந்த சந்தேகங்களை முறைப்படி நாம் கையாள்வோம் என்றால் அது நமது விசுவாசத்தை பெலப்படுத்தும். நமது விசுவாசத்தை அழிக்கும் காரியம் நம்முடைய சுயத்தை நம்புவது தான்.
சோதனைகள், பாடுகள், போராட்டங்கள் ஆகியவற்றின் நோக்கங்களில் ஒன்று நம்மை நாமே சார்ந்து கொள்ளாதபடிக்கான ஓர் நினைவூட்டலாகும். கடவுள் ஒருவர் இருக்கிறார், அவர் வல்லமையுள்ளவர் அவரது சர்வ வல்லமை பாதாளத்துக்கும் சென்று மரித்தவர்களை உயிரோடு எழுப்பும்.
சோதனைகள் நம் வாழ்வில் வந்து, நம்முடைய சுய-நம்பிக்கை எனும் குமிழியை உடைக்கின்றன. நமது கிறிஸ்தவ வாழ்க்கையில், இதை ஆண்டவரால் மட்டுமே செய்ய முடியும் என்பதை உணரும்படி, நாம் மீண்டும் மீண்டும் கடவுளைச் சார்ந்திருக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறோம்.
2 கொரிந்தியர் 1-ஆம் அதிகாரத்தில் , பலவீனத்தில் தேவனுடைய பெலன் காணப்படுகிறது என்ற தனது கடிதத்தின் முக்கிய கருப்பொருளை பவுல் ஏற்கெனவே முன்னோட்டமாகக் குறிப்பிடுகிறார். இதனுக்கிடையே, இந்தச் சபையின் ஜெபங்கள் தனக்கு உதவியுள்ளன என்றும் அவர் குறிப்பிடுகிறார். தேவனுடைய இறையாண்மையில், தேவனுடைய மக்களின் ஜெபங்களே அவரை நிலைத்திருக்கச் செய்துள்ளன.
பெரும்பாலும், ஜெபத்தைப் பொறுத்தவரை நாம் தனிப்பட்ட முறையில் சிந்திக்கிறோம், ஆனால் இங்கே பவுல், தேவனுடைய மக்களின் கூட்டு ஜெபங்கள் தமக்கு உதவியுள்ளன என்று கூறுகிறார். கொரிந்து சபையார் ஒருவரோடு ஒருவர் ஜெபித்ததால் (மூல மொழி இது ஒருமையல்ல, பன்மை என்பதைக் காட்டுகிறது), அவர்களுடைய ஜெபங்கள் அவரை ஆசீர்வதித்துள்ளன, அதன் விளைவாக, பவுலுக்காகவும் ஊழியத்தில் உள்ள அவருடைய சக ஊழியர்களுக்காகவும் அநேகர் நன்றி செலுத்துவார்கள்.
ஒரு திருச்சபையாக ஜெபிப்பது ஒரு குறிப்பிடத்தக்க ஊக்கமாகும். ஒரு சூழ்நிலையைக் குறித்து உதவியற்ற உணர்வு ஏற்படும்போது, “ஜெபிப்பது மட்டுமே என்னால் செய்ய முடியும்” என்று நினைப்பது எனது பெரும் தவறுகளில் ஒன்றாகும்; அது ஏதோவொரு வகையில் இரண்டாம் பட்சமானது என்பது போல நான் நினைப்பேன். நாம் அடிக்கடி உதவி செய்ய விரும்புகிறோம், மேலும் நம்மால் உதவக்கூடிய பல நேரங்களும் இருக்கும். ஆனால் பல நேரங்களில், “ஜெபிப்பது மட்டுமே என்னால் செய்ய முடியும்” என்று நான் நினைத்துக் கொண்டிருப்பதைக் காண்கிறேன். நமது ஜெபங்கள் உதவுகின்றன என்பதை நாம் உணர வேண்டும். நமது ஜெபங்களினாலேயே நமது சகோதர சகோதரிகள் தேவனுடைய இறையாண்மையில் தொடர்ந்து பயணிக்கிறார்கள்.
ஒரு திருச்சபையாகிய நாம், நமது ஜெபங்களின் வல்லமையை அதாவது, நமது ஜெபங்கள் ஒருவரையொருவர் தாங்கி, ஒருவருக்கொருவர் உதவி, ஒருவரையொருவர் பாதுகாக்கின்றன என்பதை நம்ப முடிந்தால், அது போராடுகிற கிறிஸ்தவர்களுக்காக ஜெபிக்க நம்மை உந்தித்தள்ளும். போதகரும் எழுத்தாளருமான ஜெஃப்ரி வில்சன் இந்த வசனத்தைப் பற்றி, “நமக்கு எந்தப் பங்கும் இல்லாத ஒரு நாடகத்தின் செயலற்ற பார்வையாளர்கள் நாம் அல்ல” என்று கூறுகிறார்.
நாம் நமது ஜெபக் கூட்டத்தில் கூடும்போது, கடவுளின் நோக்கங்களில் பங்கு கொள்கிறோம். இதில் ஆழ்ந்த இரகசியம் அடங்கியுள்ளது, ஆனால் நமது ஜெபங்கள் கிறிஸ்துவில் உள்ள நமது சகோதர சகோதரிகளுக்கு உதவுவதோடு, கடவுளின் நித்திய நோக்கங்களை நிறைவேற்றவும் பயன்படுத்தப்படுகின்றன.
இந்தக் கட்டுரை முதலில் லிகோனியர் மினிஸ்ட்ரீஸ் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.


