
கருக்கலைப்பு செய்வதினால் ஏற்படும் குற்ற உணர்விற்கான தீர்வு
09-04-2026கிறிஸ்தவ வாழ்வில் நம்பிக்கையின் பங்கு
கிறிஸ்தவ பண்புகளின் மூன்று கோணங்களான விசுவாசம், நம்பிக்கை, அன்பு ஆகிய அனைத்தும் முக்கியமானவைகள். அன்பு எந்தளவுக்கு முக்கியமானதோ அதே போல நம்பிக்கையும் இன்றியமையாத ஒன்று (1 கொரி 13:13). விசுவாசத்தின் அவசியத்தை நாம் நாள்தோறும் செயல்படுத்திக்கொண்டிருக்கிறோம், அன்பின் முக்கியத்துவத்தையும் நாம் அறிந்துள்ளோம், ஆனால் அநேக நேரங்களில் கிறிஸ்தவ வாழ்வில் மூன்றாவது குணாதிசயமான நம்பிக்கையை பற்றி அதிகமாக கவனம் கொள்வதில்லை.
ரோமர் 5 ம் அதிகாரத்தில் ஓர் வார்த்தை தவறாக புரிந்துக் கொள்ளப்படும் என்றால் அது நம்பிக்கையைத் தவிர வேறொன்றுமில்லை. பவுலால் அதிகமாக பயன்படுத்தப்படுகிற இந்த வார்த்தையின் புரிதலின் மீது கார்மேகம் போன்ற குழப்பங்கள் எப்போதும் உள்ளன. நாம் இந்த வார்த்தையை பயன்படுத்தும்போதெல்லாம், நமது விருப்பம் மற்றும் ஓர் காரியம் நடக்கும் என்று எதிர்பார்க்கிறேன் அல்லது இந்த காரியம் நடக்குமா நடக்காத என்று தெரியவில்லை என்று கூறுவதற்காகவே நம்பிக்கை என்ற வார்த்தையை நாம் வழக்கத்தில் பயன்படுத்துகிறோம். ஆனால் புதிய ஏற்பாட்டில் இவ்விதமாக இந்த வார்த்தை பயன்படுத்தப்படவில்லை. நாம் பரிசுத்த ஆவியானவரால் மறுபிறப்பு அடையும்போது, கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ்வதற்கான நமது தைரியத்திற்கு அடிப்படையாக அமையும் ஓர் நம்பிக்கைக்குள் நாம் புதிதாகப் பிறக்கிறோம். நம்பிக்கைக்கும் விசுவாசத்திற்கும் உள்ள ஒரே வித்தியாசம் என்னவென்றால், விசுவாசம் ஏற்கனவே நடந்ததை நோக்குகிறது, மேலும் நாம் அதில் நமது நம்பிக்கையை வைக்கிறோம். நம்பிக்கை என்பது வெறுமனே எதிர்காலத்தை நோக்கும் ஒரு விசுவாசம் மட்டுமே.
நம்பிக்கைதான் ஆத்துமாவின் நங்கூரம்
புதிய ஏற்பாட்டில் நம்பிக்கையின் தன்மையை விவரிக்கப் பயன்படுத்தப்படும் உருவகம் ஒரு நங்கூரம் ஆகும். நம்பிக்கை என்பது ஆத்துமாவின் நங்கூரம் என்று நமக்குச் சொல்லப்படுகிறது. இந்த கடல்சார் உருவகத்தை நாம் புதிய ஏற்பாட்டில் அடிக்கடி காண்கிறோம். நிலையற்றவர்கள், நங்கூரம் இல்லாத படகுகளுடன் ஒப்பிடப்படுகிறார்கள்; அவர்கள் ஒவ்வொரு போதனைக் காற்றினாலும் அங்கும் இங்கும் அலைக்கழிக்கப்படுகிறார்கள். அத்தகையவர்கள் தடுமாற்றம் மற்றும் நிச்சயமற்ற தன்மையால் வகைப்படுத்தப்படுகிறார்கள், ஆனால் பரிசுத்த ஆவியானவரால் ஆத்துமாவில் விதைக்கப்பட்ட நம்பிக்கை அப்படிப்பட்டதல்ல. இந்த நம்பிக்கை ஒரு அடித்தளத்தையும், நிலைத்தன்மையையும், உறுதியையும் அளிக்கிறது. நம்பிக்கை என்பது நாம் அலைக்கழிக்கப்படுவதிலிருந்து நம்மைக் காக்கும் நங்கூரம் ஆகும். தேவன் தாம் செய்வதாகச் சொன்ன ஒவ்வொரு காரியத்தையும் எதிர்காலத்தில் நிச்சயமாகச் செய்வார் என்ற நம்பிக்கையே அது.
நீதிமானாக்கப்படுதலின் பலன் இந்த வகையான நம்பிக்கையாகும். ஒரு விதத்தில், நீதிமானாக்கப்படுதல் என்பது, தேவன் தமது மீட்பின் பணியில் நமக்கு வாக்களிக்கும் எல்லாவற்றிற்குமான முன் பணமாகும். நம்பிக்கை நமக்குள்ளே பரிசுத்த ஆவியானவரால் உருவாக்கப்படுகிறது. வேறு ஒரு இடத்தில், எதிர்காலத்தைப் பற்றிய முழுமையான உறுதியை நமக்கு அளிக்கும் பரிசுத்த ஆவியானவராகிய “நிச்சயத்தை” அல்லது அச்சாரத்தை தேவன் நமக்குக் கொடுப்பதைப் பற்றி பவுல் பேசுவார். நம்பிக்கை என்பது, ஒரு பெருமூச்சு விட்டு, எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவது அல்ல. அது, தேவன் தாம் சொல்வதை நிச்சயம் செய்வார் என்ற உறுதியாகும்.
இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.


