
1 பேதுரு நிருபத்தைப் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டிய மூன்று காரியங்கள்
15-04-2025
ஆகாய் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டிய மூன்று காரியங்கள்
22-04-2025மல்கியா புத்தகத்திலிருந்து அறிய வேண்டிய 3 பிரதான சத்தியங்கள்

டெரெக் தாமஸ்
கர்த்தர் மல்கியா தீர்க்கதரிசியின் மூலமாக, தனது ஜனங்களான இஸ்ரவேலின் சிறையிருப்புக்கு பிறகு பல சவாலான விஷயங்களை மல்கியா மூலம் எடுத்துரைக்கிறார். ஏழு தீர்க்கதரிசன எதிர்வாதங்களின் தொடர்ச்சியாக மல்கியா புத்தகம் அமைந்திருக்கிறது. இதில் ஒவ்வொன்றும் கர்த்தரின் வெளிப்பாட்டிற்கு பதிலளிக்கும் ஜனங்களுடைய கசப்பான வார்த்தையுடன் தொடங்குகிறது. இந்த தீர்க்கதரிசனங்களில் பெரும்பாலானவை மல்கியாவின் காலகட்டத்தில் வாழ்ந்தவர்களுடைய மனப்பான்மையையும், செயல்களையும் கண்டிக்கும் விதமாக எழுதப்பட்டுள்ளது. இருப்பினும், தேவன் அவர்களை கடிந்துகொள்வதற்கு முன்பாக, தெரிந்தெடுக்கப்பட்ட தம்முடைய ஜனங்கள் மீதான தனது அன்பை உறுதிப்படுத்தியே தொடங்குகிறதை காண முடிகிறது. அதினாலயே சிறையிருப்பின் நியாயத்தீர்ப்பிற்கு பின்னரும் அவர்களால் தொடர்ந்து நிலைத்திருக்க முடிந்தது. தேவன் அவர்களுக்கு விரோதமாக “இதைத்தான் உங்களிடம் வெறுக்கிறேன்” என்று வெளிப்படுத்துவதற்கு முன்பாக, “நான் உங்களை சிநேகித்தேன்” (மல்கியா 1:2) என்ற ஆரம்பத்துடன் இந்த அதிகாரத்தை தொடங்குகிறார்.
1. தெரிந்தெடுக்கப்பட்டவர்களின் மீதான தேவனுடைய அன்பே எல்லாவற்றிற்கும் ஆரம்பம், என்பதை மல்கியா புத்தகம் நமக்கு வெளிப்படுத்துகிறது.
புத்தக ஆரம்பத்தில் ஜனங்கள், ” எங்களை எப்படி சிநேகித்தீர்?” (மல்கியா 1:2) என்று மறு உத்தரவு சொல்லுகிறதை பார்க்கிறோம். இந்தக் கேள்விக்கு தேவன், ஆச்சரியமான பதிலைக் கொடுக்கிறார். ஒருவேளை தேவன், தான் எவ்விதமாக பலமான அடையாளங்களை செய்து, அவர்களை பாதுகாத்து, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட கானான் தேசத்தை அவர்கள் சுதந்தரிக்கும்படியாக செய்தார் என்று யாத்திராகமம் புத்தகத்திலிருந்து மேற்கோள்களை காட்டி தன்னுடைய அன்பை நிரூபிக்கக்கூடும் என்று நாம் நினைக்கலாம். அதற்கு மாறாக, தேவன் இஸ்ரவேலை இன்னும் முன்னோக்கி பார்க்கச் செய்து, அவர்களின் முற்பிதாக்களான யாக்கோபை எவ்வாறு தெரிந்து கொண்டார் என்றும், அவனுடைய சகோதரனாகிய ஏசாவை எப்படி நிராகரித்தார் (மல். 1:3) என்பதையும் மேற்கோள் காட்டுகிறார். தகுதியற்றவனுக்கு (யாக்கோபுக்கு) கொடுக்கப்பட்ட இவ்விதமான அன்பே தேவன் இன்னமும் பாபிலோனியரால் அழிக்கப்பட்ட, எருசலேமை விட்டு சிறையிருப்புக்குட்பட்ட இஸ்ரவேலரின் மீதான தேவனுடைய அன்பை நிரூபிக்கிறது. இஸ்ரேல் தன்னுடைய பாவத்திற்கான விளைவுகளை சந்தித்தது உண்மையே, இருந்தபோதிலும் தேவனுடைய இவ்விதமான அன்பினாலே அவர்கள் மீட்கப்பட்டார்கள். ஏசாவின் சந்ததியினரான ஏதோம், பாபிலோனியர்களுக்கு உதவி செய்ததன் மூலம் வெளிப்பிரகாரமாக எவ்விதமான பாதிப்புமின்றி பாபிலோனிய காலத்தில் தப்பிப்பிழைத்தார்கள் (ஒபதியா1:10–14 ஐப் பார்க்கவும்). ஆனால் ஏதோமின் தற்காலிகமான ஆறுதல் விரைவில் நீக்கப்பட்டு, அவர்கள் முற்றிலும் அழிந்து போவார்கள், அவர்களுக்கு கடைசி காலம் சமீபிக்கும் என்றும் சொல்லுகிறார் (மல். 1:4–5). தேவனால் தெரிந்தெடுக்கப்பட்ட மக்கள் தங்கள் பாவங்களினால் இடறினாலும், அவர்கள் முற்றிலுமாக ஒருபோதும் அழிந்து போவதில்லை, ஏனென்றால் தேவன் தம்முடைய அன்பினால் தொடர்ந்து அவர்களை தாங்குகிறவராக இருக்கிறார் (சங். 37:23–24 ஐப் பார்க்கவும்).
2. வாழ்க்கை கடினமாக இருக்கும்போது தேவனுடைய ஜனங்கள் தேவன்மீது வெறுப்புணர்வின் சோதனைகளுக்கு ஆளாகிறார்கள் என்பதை மல்கியா புத்தகம் வெளிப்படுத்துகிறது.
மல்கியா புத்தகத்தில், ஜனங்கள் கர்த்தருக்கு அளிக்கும் மறுவுத்தரவானது, ஆரம்பம் முதல் இறுதி வரை மிகவும் இழிவானதாக இருப்பதை பார்க்கலாம். ஆரம்பத்தில், அவர்கள் தங்கள் மீதான தேவனுடைய அன்பை புறக்கணிக்கிறார்கள் (மல். 1:2). இறுதியில், கர்த்தருக்குக் கீழ்ப்படிவதையும் பிரயோஜனமற்றதாக எண்ணினார்கள் ஏனெனில் தீமை செய்பவர்கள் செழிப்புள்ளவர்களாகவும், கடின குணமுள்ளவர்கள் இந்த உலகில் ஆசிர்வாதமாகவும் இருப்பதினாலேயே (மல். 3:15). தேவனுடைய நீதி எங்கே? (மல். 2:17) என்று சொல்லி, தேவன் மீதான அவர்களுடைய கசப்புணர்வு, அவர்கள் மேன்மேலும் தேவனை முழுமையாக சேவிக்க முடியாமலும் (மல் 1:12-13), அவர்கள் திருமணம் செய்து கொண்ட சொந்த இஸ்ரவேல் மனைவிகளுக்கு துரோகம் செய்கிறவர்களாகவும் (மல். 2:14-16), மற்றும் தேவனுக்கென்று கொடுப்பதில் தாராளகுணம் இல்லாமலும் இருக்கும்படி (மல். 3:8-9) அவர்களை பாவத்துக்கு நேராக வழிநடத்திற்று. ஆசாரியர்களும் கூட ஜனங்களைப்போல இதேவிதமான மனப்பான்மையால் பாதிக்கப்பட்டு (மல். 2:1–9), ஜனங்கள் தேவனுக்கு குறைபாடுள்ள பலிகளைச் செலுத்த அனுமதித்து, பரிதானம் வாங்கிகொண்டு நியாயம் செய்கிறவர்களாகவும் காணப்பட்டார்கள் (மல். 2:9). பொதுவாகவே எந்த காலமாக இருந்தாலும், கடினமான சூழ்நிலைகள் பெரும்பாலும் தேவஜனங்களுடைய இருதயங்கள் தேவனை விட்டு பிரிந்து குளிர்ந்துபோக பண்ணுகிறதாகவே காணப்படுகிறது.
3. தேவன், தன்னை கனம் பண்ணுகிறவர்களை கனம்பண்ணுகிறார் என்ற சத்தியத்தையும் மல்கியா புத்தகம் நமக்கு வெளிப்படுத்துகிறது.
மல்கியாவின் காலத்தில் இருந்த எல்லாரும் தேவன்மீது இதே விதமான கசப்பான மனப்பான்மையை கொண்டவர்களாக காணப்படவில்லை. சிலர் இன்னும் தேவனுக்கு பயந்தவர்களாயிருந்ததினால் தேவன் அவர்களைத் “தன்னுடைய சம்பத்தென்றும்” உரிமை பாராட்டுகிறதை பார்க்கலாம் (மல். 3:17), இதே வார்த்தையை இஸ்ரவேல் மக்களை குறித்தும் தேவன் சொல்லுகிறதை யாத்திராகமம் 19:6 லும் காணலாம். ஜனங்கள் எதிர்பார்த்திருந்த நீதியை செலுத்துவதற்காக தேவன் சீக்கிரத்தில் தம்முடைய ஆலயத்தில் தோன்றுவார் (மல். 3:1–2) என்றும், அவர் நீதிமான்களை துன்மார்க்கரிடமிருந்து பிரித்து, தனக்கு பயப்படுகிறவர்களே தம்முடைய உண்மையான ஜனங்கள் என்று பறைசாற்றி, துன்மார்க்கனுக்கு நியாயத்தீர்ப்பையும் அழிவையும் வருவிப்பார் (மல். 4:1–3) என்றும் கூறுகிறார். அதாவது மீதமுள்ள விசுவாச கூட்டத்தார், மோசேயின் நியாயப்பிரமாணத்தை நினைவுகூர்ந்து, தேவன் எதிர்பார்க்கும் பரிசுத்த வாழ்க்கைக்கென்று தங்களை அர்ப்பணித்து, மேலும் தேவனுடைய பிள்ளைகளை மனந்திரும்புதலுக்கென்று அழைக்க ஒரு புதிய எலியாவின் வருகையை எதிர்நோக்கி காத்திருக்கும்படியாகவும் (மல். 4:4–6), அவனுடைய சத்தத்திற்கு செவிகொடுக்க மறுப்பவர்கள் நியாயத்தீர்ப்பையும் சாபத்தையும் பெறுவார்கள் (herem; மல். 4:6) போன்ற அநேக சத்தியங்களையும் முன்னுரைக்கிறார்.
மோசேயின் நியாயப்பிரமாணத்தை கைக்கொள்ளாமல் பாவத்திற்குள்ளாக விழுந்துபோன நாம் அனைவரும், ரோமர் 3 இல் அப்போஸ்தலனாகிய பவுல் சுட்டிக்காட்டுவது போல, கடைசி நியாயத்தீர்ப்பு நாளில், தேவன் நாம் அனைவரையும் கண்டிக்காமல் நீதிமான்களையும் அநீதிமான்களையும் எவ்வாறு வேறுபடுத்திப் பார்க்க முடியும்? என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். தேவன் தான் நேசித்து தெரிந்தெடுத்த துன்மார்க்கனான யாக்கோபை எவ்வாறு காப்பாற்ற முடியும்? இந்தக் கேள்விக்கான பதிலை புதிய ஏற்பாட்டில் இருந்து பெற்றுக்கொள்ளும்படியாக மல்கியா தீர்க்கதரிசன புத்தகம் நம்மை தயார்படுத்துகிறதாயிருக்கிறது.
லூக்கா 1:17 இல், யோவான்ஸ்நானகன், தன்னுடைய பிறப்புக்கு முன்பாகவே, இயேசு கிறிஸ்துவின் வருகையில், அவருக்கு முன்பாக வரவிருக்கும் எலியாவாக அடையாளம் காட்டப்படுகிறார். குறிப்பிடத்தக்க வகையில், தேவதூதன் மல்கியாவின் தீர்க்கதரிசனத்தில் உரைக்கப்பட்ட நேரடியான சத்தியத்தை சுட்டிக்காட்டி, “பிதாக்களின் இருதயங்களைப் பிள்ளைகளிடத்திற்கும், கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானத்திற்கும் திருப்பி, உத்தமமான ஜனத்தை கர்த்தருக்கு ஆயத்தப்படுத்தும்படியாக, அவன் எலியாவின் ஆவியும் பலமும் உடையவனாய் அவருக்கு முன்னே நடப்பான்” என்று அறிவித்தான். நியாயத்தீர்ப்பின் சாபத்தை குறித்ததான சத்தியமானது இங்கே முன்னறிவிக்கபடவில்லை. ஏனெனில் அவருடைய முதல் வருகையில், இயேசு கிறிஸ்து இழந்துபோனதை தேடி இரட்சிப்பார் என்பதினாலேதான்
(மத். 1:21).
மறுரூபமலையில், இயேசு மோசே மற்றும் எலியா இருவரையும் சந்தித்து, எருசலேமில் தான் நிறைவேற்றப்போகிற தன்னுடைய ஜனங்களுக்கான மீட்பை குறித்து பேசினார் (லூக்கா 9:31). இப்போது கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்கள் மனந்திரும்பாத பட்சத்தில், அவர்களை அழிக்கும் படியாக, இயேசுகிறிஸ்து வெள்ளை குதிரையில் மீதேறி மீண்டுமாக இரண்டாம்முறை வருவார் (வெளி 19:11-12). அதேவேளையில் கிறிஸ்துவுக்குள்ளான விசுவாசத்தினால் தேவனுடைய நாமத்துக்கு பயந்திருக்கிறவர்களுக்கு, அந்த நாள் எல்லாவற்றையும் சுட்டெரிக்கும் சூளையையைப் போலிராமல், வசந்த காலத்தில் உதயமாகும் சூரியனுடைய மென்மையான கதிர்களைப் போன்று, அவர்களை மனரம்மியமாக மகிழ்ச்சியூட்டக்கூடியதாய் காணப்படும் (மல். 4:1-2) என்பதே இப்புத்தகத்தின் இறுதியாக எல்லா ஜனங்களுக்குமான நம்பிக்கையூட்டும் செய்தியாக உள்ளது.
இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.