3-Things-You-Should-Know-about-Malachi
மல்கியா புத்தகத்திலிருந்து அறிய வேண்டிய 3 பிரதான சத்தியங்கள்
17-04-2025
3-Things-You-Should-Know-about-Hosea
ஓசியாவைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 3 அடிப்படை காரியங்கள்
24-04-2025
3-Things-You-Should-Know-about-Malachi
மல்கியா புத்தகத்திலிருந்து அறிய வேண்டிய 3 பிரதான சத்தியங்கள்
17-04-2025
3-Things-You-Should-Know-about-Hosea
ஓசியாவைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 3 அடிப்படை காரியங்கள்
24-04-2025

ஆகாய் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டிய மூன்று காரியங்கள்

3-Things-to-Know-about-Haggai

இயன் டுகிட்

1.தேவனுக்கு கீழ்ப்படிய முதலிடம் கொடுக்கவேண்டிய நேரம் இது.

ஆகாய் புத்தகம் மிகவும் சோர்வடைந்த மக்களுக்கு எழுதப்பட்டது. பாபிலோனிலிருந்து யூதாவுக்கு திரும்பிய இஸ்ரவேல் ஜனங்கள் தங்களின் சொந்த தேசத்தில் வாழ்வதை மிகவும் கடினமாக கண்டனர். எல்லா பக்கங்களிலும் எதிரிகளால் சூழப்பட்டிருக்கையில், தங்கள் சொந்த தேசத்தையும், தங்கள் முன்பு வாழ்ந்த வாழ்க்கையையும் மீண்டும் கட்டியெழுப்புவது அவர்கள் நினைத்ததைவிட மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது, மேலும் ஏசாயா 40-66 ல் சொல்லப்பட்ட மகிமையான வாக்குத்தத்தங்கள் அவர்களின் அனுபவத்திலிருந்து வெகுதொலைவில் இருந்தன. இதன் விளைவாக, அவர்கள் தங்கள் வாழ்க்கை எளிமையாகும் வரை தேவாலய புனரமைப்பின் வேலையை நிறுத்தி வைத்திருந்தனர். இந்த ஜனங்கள் கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்கு ஏற்றகாலம் இன்னும் வரவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. (ஆகாய் 1:2).

இருப்பினும், கர்த்தருடைய பார்வை வேறுபட்டிருந்தது. அவர்கள் தங்கள் வீடுகளை கட்டுவதற்கான மரத்தின் வளங்களை சேகரித்தார்கள் என்பதை தேவன் சுட்டிக்காட்டுகிறார் (ஆகாய் 1:4, 1 இராஜா 6:9;7:3;7). இதற்கிடையில் அவர்கள் தேவனுக்கு கீழ்ப்படியாததினால் அவர்களின் அனைத்து செயல்பாடுகளும் தேவனின் சாபத்திற்கீழ் இருந்தது (1:5-6). அவர்கள் தங்கள் வழிகளை சிந்தித்து, சாக்குப்போக்குகளை நீக்கி, தேவனுக்கு கீழ்படிதலுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும் (1:8). ஆளுநரான செருபாபேல் மற்றும் பிரதான ஆசாரியரான யோசுவாவின் தலைமையில் ஜனங்கள் ஆகாயின் வார்த்தைகளை கேட்டு மீண்டும் தேவாலய பணிகளை செய்ய ஆரம்பித்தார்கள் (1:12). தேவன் தம் மக்களோடு இருக்கிறார் என்பதற்கு அடையாளமான தேவாலயத்தை கட்டி எழுப்புவதற்கு, கர்த்தர் அவர்களுடனே இருந்து அவர்களின் ஆவிகளை எழுப்பினார். அவர்கள் ஒன்றாக வேலை செய்ய துவங்கினார்கள் (1:14).

2. சிறப்பான ஒன்று இன்னும் வரவில்லை.

எருசலேமில் ஜனங்கள் ஆலயத்தை மீண்டும் கட்டியெழுப்ப உழைத்தபோது, மற்றொரு மனச்சோர்வை அவர்கள் அடைந்தார்கள். என்னவெனில், பழைய ஆலயத்தின் முந்தைய மகிமை இப்போது உள்ள புது ஆலயத்தில் இல்லை (ஆகாய் 2:2-3). இந்த புது ஆலயம் சாலமோன் ஆலயத்தின் அளவில் இருந்தபோதிலும், இதில் தேவைக்குத்தகுந்த வெள்ளியும் பொன்னும் பற்றாக்குறையாக இருந்தது மாத்திரமல்ல, சாலமோன் நாட்களில் இருந்ததுபோல, இப்பொழுது இந்த தேவாலயம் இஸ்ரவேல் ராஜ்யம் மற்றும் பேரரசின் மைய அடையாளமாக இல்லை. இன்னும் மோசமாக, இந்த ஆலயம் பாபிலோனியர்களால் அழிக்கப்படுவதற்கு முன்னே இங்கிருந்து தேவனின் மகிமை வெளியேறியது (எசே 10). தேவனின் பிரசன்னம் மீண்டும் இங்கு எழும்பும் என்ற வாக்குத்தத்தம் திரும்பும் வரை ஆலயம் வெறுமையான பயனற்ற ஒன்றாகவே இருக்கும். (எசே 43). அவரின் பிரசன்னத்தின் பலன்கள் கண்களால் பார்க்கமுடியவில்லையென்றாலும், ஆனாலும் தேவன் அவர்கள் நடுவில் மீண்டும் வந்துவிட்டார் என்பதை தனது தீர்க்கதரிசியின் வார்த்தைகள் மூலமாக அறிவித்து மக்களை ஊக்கப்படுத்துகிறார். (2:4-5). யோசுவா மற்றும் சாலமோன் நாட்களில் கொடுக்கப்பட்ட கட்டளைகளைப் போல, இந்த மக்களும் பலங்கொண்டு திடமனதாயிருந்து காரியங்களை நடப்பிக்கவேண்டும் (யோசுவா 1:6, 1 இராஜா 2:2). எகிப்திலிருந்து பிரயாணம் பண்ணின மக்களோடு இருந்த அதே தேவன், இவர்களோடும் இருந்து ஜனங்களின் உழைப்பு வீணாக போகாதபடிக்கு பார்த்துக்கொள்வார் (ஆகாய் 1:13).

ஆனாலும் அவர்கள் தங்கள் கண்களால் எதை பார்க்கிறார்களோ அது மாத்திரம் தேவன் செயல்படுகிறார் என்பதற்கான அளவுகோல் அல்ல. தங்களின் கடந்த காலத்தை திரும்பிப்பார்த்து தேவன் என்ன செய்தார் என்பதை நினைவுகூர்ந்து உற்சாகத்தை அடைந்து, எதிர்காலத்தில் தேவன் என்ன செய்யப்போகிறார் என்பதையும் அவர்கள் நினைவில் கொள்ளவேண்டும். (2:6-9). கர்த்தர் இந்த தற்போதைய உலகை தலைகீழாக மாற்றி தேசங்களை அதனதின் இடத்தில் வைத்து, தம்முடைய ஆலயத்திலிருந்து பாய்ந்தோடும் சமாதானத்தினால் (ஷாலோம்) தம்முடைய மக்களை ஆசீர்வதிக்கும் ஒரு நாள் வரவேண்டியிருந்தது.

3. தேவனின் வாக்குத்தத்தங்கள் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் இணைக்கின்றன.

எருசலேம் தேவாலயத்தில் தம் மக்களுடன் இருப்பதற்கான தேவனின் வாக்குத்தத்தமும், தாவீதின் சந்ததியில் வரக்கூடிய மேசியாவைப் பற்றிய வாக்குத்தத்தமும் ஆகாய் தீர்க்கதரிசன புத்தகம் முழுவதும் தொடர்ச்சியாக பாய்ந்தோடுகின்றன. (2 சாமு 7). இப்புத்தகத்தின் ஆரம்பத்தில் இந்த இரண்டு வாக்குத்தத்தங்களும் கேள்விக்குறியாக தோன்றுகிறது: எருசலேம் தேவாலயம் தேவனின் மகிமையால் கைவிடப்பட்டு, இப்பொழுது அழிவின் நடுவில் உள்ளது, மேலும் தாவீதின் வம்சம் துண்டிக்கப்பட்டு கைவிடப்பட்ட முத்திரை மோதிரம் போல தேவனால் நிராகரிக்கப்பட்டது (எரே 22:24-26). ஆனால் இப்புத்தகத்தின் முடிவில் மீண்டும் புதுப்பித்தலுக்கான ஆதாரங்கள் காணப்பட்டு, தேவனின் முத்திரை மோதிரமாக தாவீதின் வம்சத்தில் வந்த ஆளுநரான செருபாபேல் தெரிந்தெடுக்கப்பட்டு, ஆலயம் மீண்டும் அவன் தலைமையில் கட்டப்படுகிறது (ஆகாய் 2:23). இருப்பினும் இந்த ஆலயத்தில் தேவனின் மகிமை இன்னும் இல்லை, செருபாபேலும் ஓர் ஆளுநரே தவிர மற்றப்படி அவன் ராஜாவோ அல்லது வாக்குப்பண்ணப்பட்ட மேசியாவோ அல்ல. எனவே, மக்கள் விசுவாசத்தினாலே வாழ்ந்து, இம்மட்டும் தேவன் அவர்கள் நடுவில் செய்துவருகிற கிரியைகள் கடைசி நாளில் அவைகள் நிறைவடையும் என்பதை விசுவாசிக்கவேண்டும். 

இரண்டு வாக்குத்தத்தங்களும் கிறிஸ்துவை நோக்கியே செல்கின்றன. அவரே தேவனின் உண்மையான ஆலயம் (யோவான் 2:19), கிறிஸ்துவே தேவனின் மகிமையாக நம்முடன் வாசம் பண்ண வந்தவர் (யோவான் 1:14), அவர் இம்மானுவேலராக, தேவனின் பிரசன்னத்தை சரீர பிரகாரமாக தம் மக்களின் மத்தியில் கொண்டு வந்து தேவனை பிரதிபலிக்கிறவர். திருச்சபை என்பது, கிறிஸ்துவின் சரீரமாக யூதர்களாலும், புறஜாதிகளாலும் உருவாக்கப்பட்ட புதிய ஆலயமாகும். இத்திருச்சபை தேவனுக்கு புதிய வாசஸ்தலமான ஒன்றாக கட்டப்படுகிறது (எபே 2:16-17, 2 கொரி 6:16-7:1).

நாமும் செருபாபேலின் பெரிய குமாரனான இயேசு கிறிஸ்துவையே நோக்கிப் பார்க்கிறோம். அவரில் தான் நமது நம்பிக்கை உள்ளது (மத் 1:13). அவரிடம் மனிதர்களை கவருவதற்காக எவ்வித அழகோ கவர்ச்சிகளோ இல்லை, அடிமையின் ரூபமெடுத்து, தனது மரணபரியந்தமும் தன்னை முழுமையாக தாழ்த்தினார் (பிலி 2:5-8). இருப்பினும் அவரது கீழ்ப்படிதலின் நிமித்தம், தேவன் அவரை எல்லாவற்றிற்கும் மேலாக உயர்த்தினார் (பிலி 2:9-11). இப்பொழுதோ இவ்வுலகத்தின் முடிவுக்காக காத்திருக்கிறவர்களாக, நமது அழைப்பில் நாம் உண்மையுள்ளவர்களாயும், கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் பிரகாசத்தில் நமது உழைப்பு ஒருபோதும் வீண்போகாது என்பதிலும் உறுதியாயிருக்கவேண்டும் (1 கொரி 15:58).

இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.

இயன் டுகிட்
இயன் டுகிட்
டாக்டர் இயன் டுகிட் பிலெடெல்பியாவில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் இறையியல் வேதாகம கல்லூரியில் பழைய ஏற்பாட்டுப் பேராசிரியராக உள்ளார். அவர் கடவுளின் முழு சர்வாயுதம் மற்றும் செப்பனியா, ஆகாய் & மல்கியா உள்ளிட்ட பல புத்தகங்களை எழுதியுள்ளார்.