
ஆகாய் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டிய மூன்று காரியங்கள்
22-04-2025
எசேக்கியேல் புத்தகத்தைப் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டிய மூன்று காரியங்கள்
29-04-2025ஓசியாவைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 3 அடிப்படை காரியங்கள்

1.ஓசியா என்ற பெயருக்கு “இரட்சிப்பு” என்று அர்த்தமாம். எழுதப்பட்ட தீர்க்கதரிசிகளில் ஓசியா தீர்க்கதரிசி தனித்துவமானவர், ஏனெனில் அவர் வடக்கு இஸ்ரேல் தேசத்தை சேர்ந்தவராக, இஸ்ரவேலின் வடக்கு திசையிலே பிரசங்கித்தார்.
ஓசியா 1:1, ஓசியாவின் ஊழியத்தை பார்க்கும்போது அவர், வட தேசத்து ராஜாவான இரண்டாம் யெரொபெயாம் மற்றும் தெற்கு ராஜாக்களான உசியா, யோதாம், ஆகாஸ் மற்றும் எசேக்கியா ஆகியோரின் காலகட்டத்துடன் தொடர்புடையவர் என்று தெரிகிறது. இது அவர் யோனாவின் காலகட்டத்திலும் வாழ்ந்திருக்கலாம் என்ற புரிதலை நமக்கு கொடுக்கிறது (2 இராஜாக்கள் 14:25). மற்றொரு வட தேசத்து தீர்க்கதரிசியான யோனா இரண்டாம் யெரொபெயாம் ராஜாவாக ஆண்டபோது ஊழியம் செய்தவர், இருப்பினும் யோனா தீர்க்கதரிசன புத்தகமானது நினிவேயுடனான அவரது தனிப்பட்ட அனுபவத்தைப் பற்றினதே ஆகும்.
ஓசியா, வடக்கேயிருந்து தெற்குதேசம் வரைக்கும் தீர்க்கதரிசியாயிருந்த ஆமோஸ் மற்றும் தெற்கு ராஜ்யத்தில் தீர்க்கதரிசிகளாக இருந்த ஏசாயா மற்றும் மீகா ஆகியோரின் காலகட்டத்தை சேர்ந்தவராக இருந்தார். மேற்சொல்லிய ராஜாக்கள் ஆட்சி செய்த ஆண்டுகளின் மொத்த எண்ணிக்கை நூற்றுக்கும் அதிகமாக இருந்தாலும், ஓசியாவின் ஊழியம் அநேகமாக இரண்டாம் யெரொபெயாமின் இறுதி காலகட்டத்திலும் (கி.மு. 753 இல்) மற்றும் எசேக்கியாவின் ஆரம்ப காலங்களிலும் (கி.மு. 725 இல்) தொடங்கி இருக்கலாம். கி.மு. 722 இல் அசீரியர்களிடம் சமாரியா வீழ்ச்சியடைவதற்கு முன்பு, இஸ்ரவேல் மிகப்பெரிய அரசியல் நெருக்கடி மற்றும் மதம் சம்பந்தமான குழப்பமானது நிலவிய காலகட்டமாக இருந்தது. இந்த ஆபத்தான நிலையில்தான் ஓசியா அதனுடைய ஆபத்தை உணர்ந்தவராக, பேரழிவின் விளிம்பில் நின்ற அந்த ஜனங்களுக்கு பிரசங்கித்தார்.
2. ஓசியாவின் தனிப்பட்ட திருமண வாழ்க்கை அவரது செய்தியை பிரதிபலிக்கிறதாயிருக்கிறது.
கோமேருடனான ஓசியாவின் திருமணமானது, அவர் பிரசங்கித்த செய்திக்கான ஒரு வெளிப்புற அடையாளம் அல்லது செய்தியின் கருப்பொருளை வெளிப்படுத்தும் பாடமாக இருக்கிறது. ஓசியா 3:1 ல் கோமேருடனான ஓசியாவின் திருமணமானது, இஸ்ரவேலுடனான தேவனுடைய திருமணத்துக்கு அடையாளமாயிருக்கிறது. கோமேருடனான ஓசியாவின் உறவும், இஸ்ரவேலுடனான தேவனின் உறவும் அன்பின் அடிப்படையிலேயே தொடங்குகிறது (தெய்வீக கிருபையால்).பாவத்தால் நிராகரிக்கப்பட்ட நிலையில் (தெய்வீக வெறுப்பு), விசுவாசத்தால் நிலை நிறுத்தப்படுகிறது (தெய்வீக உண்மைத்தன்மை). கோமேருடனான ஓசியாவின் நிலையான அன்பு மற்றும் உண்மைத்தன்மையானது , இஸ்ரவேல் மீதான தேவனுடைய மாறாத அன்பு மற்றும் உண்மைதன்மையை வெளிப்படுத்தும் காட்சியாக இருக்கிறது. ஓசியாவுடனான உறவில் கோமேருடைய உண்மையற்ற தன்மையானது, தேவனுடனான இஸ்ரவேல் ஜனங்களுடைய ஏமாற்றுகிற, உண்மையற்ற தன்மைக்கு அடையாளமாய் இருக்கிறது. பழைய ஏற்பாடு முழுவதுமாக தேவனுக்கும் அவருடைய ஜனங்களுக்குமான உறவானது திருமணத்திற்கு அடையாளமாக இருக்கிறது என்கிற சத்தியத்தை ஓசியா புத்தகத்தில் சொல்லப்பட்டதை போல வேறு எங்கும் சொல்லப்படவில்லை என்று நாம் அறியலாம்.
ஓசியாவின் திருமணம் இந்த புத்தகத்தின் செய்திக்கு மிக முக்கியமானது என்றாலும், அதனுடைய விளக்கத்தின் அர்த்தம் ஒரு பெரிய பிரச்சனையை உருவாக்கும் விதமாகவே உள்ளது. பிரச்சினையின் முக்கிய அம்சம் என்னவென்றால் ஓசியா ஒரு “வேசித்தன மனைவியை” திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற தேவனுடைய முதல் கட்டளையினாலேயேதான் (ஓசி. 1:2). மேலோட்டமாகப் பார்த்தால், இது ஒரு சட்டரீதியாக மற்றும் ஒழுக்கம் சம்பந்தமான ஒரு குளறுபடியை உண்டாக்குகிறது. ஏனெனில் இது தேவன், ஆசாரியர்களுக்கு வெளிப்படுத்தின திருமணத்திற்கான தெளிவான வழிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு விரோதமானதாக இருப்பதை காட்டுகிறது. ஏனெனில் , தேவாலயத்தில் வேலை செய்யும் ஆசாரியர்கள் வேசிகளை திருமணம் செய்யக்கூடாது என்று தேவன் கட்டளையிடுகிறதை பார்க்கலாம் (லேவி. 21:7, 13). ஒரு ஆசாரியன் ஒரு வேசியை திருமணம் செய்வது தகுதியற்றதாக இருக்கும் போது, அது ஒரு தீர்க்கதரிசிக்கும் அவமானத்தை உண்டுபண்ணக்கூடிய தகுதியற்ற செயலேயாகும்.
உபாகமம் 22:13, 20–21 ல் தேவனுடைய பிரமாணமானது, திருமணத்தின்போது கன்னிமையை நிரூபிக்கப்படாத ஒரு ஸ்திரீக்கு மரண தண்டனையையே விதித்தது. எனவே ஓசியா திருமணத்தில் தன்னுடைய வாழ்க்கையை ஆரம்பிப்பதை விட துக்க இறுதிச்சடங்கில் வாழ்க்கையை தொடங்குவது நலமாயிருக்கும் என்பதைப் போல நினைக்கத் தோன்றுகிறது. இந்த பிரச்சனைக்கான தீர்வானது இரண்டு முக்கியமான விளக்கத்தை மையமாகக் கொண்டது: ஒன்று ஓசியாவின் திருமணத்தை கற்பனையானதாகக் கருதுபவர்கள், மற்றொன்று ஓசியாவின் திருமணத்தை உண்மையான சம்பவமாகவே எண்ணுபவர்கள்.
திருமணத்திற்கான உருவகமாகவே, ஓசியாவின் திருமண வாழ்க்கை கற்பனையாக இருக்கிறதென்று என்றெண்ணுபவர்கள், இஸ்ரவேல் ஜனங்களுடனான தேவனுடைய உறவையும், அந்த தேவனுக்கு அவர்களுடைய ஆவிக்குரிய உண்மையற்ற தன்மையையும் விளக்குவதாகவே இந்த நிகழ்வை அர்த்தப்படுத்துகிறார்கள் . இவர்கள் ஓசியாவின் இந்த திருமணத்திற்கான நோக்கத்தை, தகுதியற்றவர்கள் மீதான தேவனுடைய அன்பைப் பற்றி விளக்கும் இறையியல் கொள்கையோடு சம்பந்தப்படுத்தினாலும் , சட்டரீதியாக மற்றும் ஒழுக்க ரீதியான நெறிமுறைகளை கண்டுகொள்ளாமல் இருப்பது சரியானது என்பதைப் போன்ற கருத்துக்களை திணிக்க முற்படுகிறார்கள். ஏனெனில் இங்கே எழுத்துப்பூர்வமான விளக்கத்தை விட, இறையியல் சூழ்நிலைக்கு ஏற்றவாறான விளக்கங்கள் அமைந்திருப்பதே மேற்கண்ட சிந்தனைக்கு வழி நடத்துவதாக அவர்கள் விளக்கப்படுத்துகிறார்கள்.
ஓசியாவின் திருமணத்தை அதில் வெளிப்படுத்தப்பட்ட நேரடி சொற்களுக்கு ஏற்றவாறு உண்மையென்று எண்ணுபவர்கள், உண்மையான ஒரு திருமணம் நடந்ததாக ஒப்புக்கொண்டாலும், கோமேருடைய வேசித்தனத்தின் தன்மையினுடய காலகட்டத்தின் விளக்கத்தை ஒப்புக் கொள்வதில்லை. திருமணத்தின் போதே கோமேர் ஒரு வேசி என்று ஒப்புக்கொண்டாலும், தகுதியற்ற பாவிகள் மீதான தேவனுடைய அளவற்ற அன்பை உயர்த்திக் காட்டும்படியாய், தேவன் முன்னே தான் கொடுத்த பிரமாணங்களை மாற்றி அமைக்கிறார் என்றும் பொருள்படுத்துகிறார்கள். மற்றொரு தரப்பினர் இங்கே சொல்லப்பட்டுள்ள வேசித்தனமானது, சரீர பிரகாரமான வேசித்தனத்தை குறிப்பிடாமல் ஆவிக்குரிய வேசித்தனமாகிய விக்கிரக ஆராதனையை குறிப்பிடுவதாக நினைக்கிறார்கள். இது பாலியல் சார்ந்த ஒழுக்கக்கேடான ஒரு ஸ்தீரியை திருமணம் செய்வதால் ஏற்படும் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாலும், ஒரு விக்கிரக ஆராதனை செய்யும்படியான நபரை தீர்க்கதரிசி திருமணம் செய்து கொள்ளலாம் என்று தேவன் அனுமதிப்பதை போன்ற ஒரு பெரிய பிரச்சனையை கொண்டு வருவதாக இருக்கிறது. ஏனெனில் தேவன் தாமே நியாயப்பிரமாணத்தில் விசுவாசமற்ற புறஜாதிகளோடு திருமணத்தில் இணையக்கூடாது என்பதை தெளிவாக உறுதிப்படுத்தியிருக்கிறார் (உபா. 7:3–4).
இந்த திருமணத்தை உண்மையான திருமண நிகழ்வாக சொற்களின் அடிப்படையில் அர்த்தப்படுத்துபவர்கள் (“proleptic view” ) – “ப்ரோலெப்டிக் பார்வை” என்று அழைக்கப்படும் மற்றொரு திசைக்கும் நம்மை திருப்புகிறார்கள். அது இந்த உண்மையான திருமண நிகழ்வின் போது, கோமேர் பிழையற்றவளாக இருந்தாள் என்றும் ஆனால் திருமணத்திற்கு பின்னரே அவள் ஒரு வேசியாக மாறினாள் என்றும் பொருள்படுத்துகிறார்கள். இருப்பினும் இந்த விளக்கம் கோமேர் எப்படிப்பட்டவள் என்றல்ல அவள் எப்படிபட்டவளாக மாறினாள் என்பதிலேயே கவனத்தை செலுத்துகிறது. “வேசித்தனம்” என்ற வார்த்தையினுடைய அர்த்தத்தை விளங்கிக்கொள்ள மற்றும் ஒரு தீர்வு என்னவென்றால், இது வெளிப்பிரகாரமான நடத்தையை பற்றி பேசாமல் உள்ளான நற்குணத்தையே மையப்படுத்துகிறது என்று எண்ணுவதாகும். இதன் அடிப்படையில் கோமேர் திருமணத்திற்குசற்று பிறகு அல்ல, அதற்கு முன்பாகவே அவளுடைய பண்புகள் ஒழுக்க கேடானவைகளுக்கு வளைந்து கொடுத்திருந்தது என்ற அர்த்தத்தை வெளிப்படுத்துகிறது. ஓசியா 3:1 இல் அவள் ஒரு உண்மையான விபச்சாரியாக மாறிப் போனாள் என்றும் அதுவே அவளுடைய உள்ளான இருதயத்தின் விருப்பங்கள் முன்னமே விபச்சார சிந்தையாகவே காணப்பட்டது என்பதற்கு சான்றாக அமைகிறது. இந்தக் கண்ணோட்டத்தில், திருமணத்தின் புனித தன்மையை ஆபத்துக்குள்ளாக்கும் கோமேரின் உள்ளான குணத்தை பற்றிய வெளிப்பாட்டை தேவன் ஓசியாவுக்கு முன்கூட்டியே வெளிப்படுத்தினார். ஓசியா ஆரம்பத்திலிருந்தே தன்னை காயப்படுத்தும் கோமேரின் குணநலன்களை அறிந்திருந்தார் என்பது ஓசியாவினுடைய சுயநலமற்ற அன்பின் தன்மையை நமக்கு வெளிப்படுத்துகிறது. இதுவே விசுவாசிகளை தேவனிடம் இணைக்கும்படியான திறவுகோலாக அமைகிறது : தேவன் நாம் எப்படிப்பட்டவர்கள் என்பதை அறிந்திருந்தாலும் நம்மை நேசிக்கிறவராகவே இருக்கிறார்.
3. ஓசியாவின் செய்தி கிறிஸ்துவுக்குள்ளான தேவனுடைய கிருபையை முன்னறிவிக்கிறது.
ஓசியாவின் மூலமாக கொடுக்கப்பட்ட மனந்திரும்புதலுக்கான அழைப்பையும், எச்சரிக்கையையும் கருத்தில் கொள்ளாதே போவோமானால் தேசத்தின் மீதான அழிவு அதிபயங்கரமாக இருக்கும். இருப்பினும், தீர்க்கதரிசியின் மூலமாக சொல்லப்பட்ட இந்த செய்தியை இஸ்ரவேல் ஜனங்கள் தங்களுடைய அறியாமையினாலும், முட்டாள்தனத்தினாலும் நிராகரித்ததின் விளைவு கிருபையின் சுவிசேஷத்திற்கு நேராக நம்மை வழி நடத்துகிறது. 2 இராஜாக்கள் 15:29ன் படி, நப்தலி தேசம் தேவனுடைய நியாயத்தீர்ப்பை சந்தித்த முதல் தேசமாகும். ஆனால் மத்தேயு 4:12–16 ன் படி, ஆண்டவராகிய இயேசுவின் ஊழியம் அங்கே முதலாவது ஆரம்பமாகிறதை பார்க்கலாம். ஓசியாவின் நாட்களில் காணப்பட்ட இருளானது, ஒளியாகிய கிறிஸ்துவுக்கு நேராக வழிநடத்துகிறது. இருளின் காலமானது, வெளிச்சத்தை பிரகாசிக்க செய்யும் காலகட்டத்திற்கு நேராக வழிநடத்தும் ஒரு படிநிலையாக அமைகிறது. இது தேவனுடைய நோக்கங்களும், திட்டங்களும் எப்பொழுதும் ஒன்றிணைந்தே செயல்படுவதை நமக்கு தெளிவாக காட்டுகிறது.
இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.