
நான் அகப்பட்டதுபோல் உணரும்போது
16-06-2026விதிவிலக்கான மந்தநிலை
The Hunger for Significance – முக்கியத்துவத்திற்கான பசி என்ற எனது புத்தகத்தில், நம் வாழ்வில் கண்ணியம், மதிப்பு மற்றும் தகுதிக்கான ஏதோவொரு அடிப்படையைக் கண்டறிய நமக்குள் பொதுவாகக் காணப்படும் விருப்பத்தை நான் ஆராய்ந்தேன். அந்த நேரத்தில் நான் எழுதினேன்: “நவீன மனிதனுக்குள் ஒரு வேதனைமிக்க வெற்றிடம் உள்ளது. நமக்கு ஏற்படும் இந்த வெறுமையை நாம் பெறும் ஒரு புதிய காரினாலோ, சிறந்த வேலையினாலோ அல்லது பெரிய வீட்டினாலோ போக்கிவிட முடியாது. ஒவ்வொரு மனித வாழ்க்கையும் அதைவிட முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைப் புரிந்துகொள்வதன் மூலம் மட்டுமே நாம் அதை சரிசெய்ய முடியும். நம் வாழ்க்கையை வீணான நோக்கத்தினால் அர்த்தமற்றதாகக் குறைத்து மதிப்பிட முடியாது.”
முக்கியத்துவம் மற்றும் மனித கண்ணியத்திற்கான நவீன தேடலானது, நாம் வாழும் கலாச்சார உலகக் கண்ணோட்டத்திற்குள் ஊடுருவி நிற்கும் விரக்தியின் அளவிட முடியாத ஒரு சூழலால் அடிக்கடி தூண்டப்படுகிறது. நாம் சேற்றிலிருந்து தற்செயலாக கசிந்து வந்த பிரபஞ்ச விபத்துக்கள் என்று நமக்குத் திரும்பத் திரும்பச் பலரால் சொல்லப்படுகிறது. நமது தோற்றம் அர்த்தமற்றது மற்றும் நமது முடிவு அழிவு. ஆனாலும், நமது மனவிரக்தியின் அந்த இரு துருவங்களுக்கு மத்தியில், நமது முக்கியத்துவம் மற்றும் கண்ணியத்திற்கான தேடல் என்பது பெரும்பாலும் அவசர உணர்வோடு கலந்த ஒன்றாகவே இருக்கிறது.
Tabletalk- என்கிற இதழில், நாம் மேன்மைக்கான தேடலை ஆராய்ந்து வருகிறோம், இது பல சந்தர்ப்பங்களில் முக்கியத்துவத்திற்கான நமது அடிப்படை விருப்பத்துடன் பிரிக்க முடியாத அளவில் தொடர்புடையது. நமது உலக மேன்மைக்கான தேடலுக்கு வெவ்வேறு மற்றும் சில நேரங்களில் முரண்பாடான நோக்கங்கள் இருக்கலாம். அந்த தேடல் என்பது நாம் ஈடுபட்டுள்ள ஒரு விஷயத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்ற எளிய விருப்பத்தின் அடிப்படையில் மட்டுமே இருக்கலாம். ஒருபுறம், இந்த வகையான சிறந்து விளங்குவதற்கான நோக்கம் போட்டி ஆதிக்கமாக இருக்கலாம். வரலாற்று ரீதியாக, நாம் நமது மனிதத்தன்மையை Homo sapiens என்ற சொல்லின் மூலம் வரையறுத்துள்ளோம். பத்தொன்பதாம் நூற்றாண்டின் நரிவா என்ற சூனியவாத தத்துவஞானியான பிரீட்ரிக் நீட்சே (Friedrich Nietzsche), மனித இருப்பை மிக அதிகமாக வரையறுப்பது நமது ஞானம் அல்ல, மாறாக நமது அதிகாரத்திற்கான விருப்பம் மற்றும் வெல்வதற்கான நமது விருப்பம் என்று வாதிட்டார். கொடுங்கோலர்களையும் சர்வாதிகாரிகளையும் தூண்டும் அதிகார வெறி என்பது நாம் இயல்பாகவே தீமையாகக் கருதும் ஒன்றாகும், ஆனால் நீட்சே அதை ஒரு மனித நற்பண்பாகக் கருதினார். அவரைப் பொறுத்தவரை, அதிகார மனிதன் என்பவன் எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு வெற்றியாளன் ஆவான். அவன் தன் இயல்பான அதிகார விருப்பத்தை தடையின்றி செல்ல அனுமதிப்பது மட்டுமல்லாமல், கிடைக்கக்கூடிய எல்லா வழிகளிலும் அதை ஆசையோடு வளர்ப்பவன் ஆவான். நாம் வாழும் உலகில், அதிகாரத்திற்கான விருப்பம் என்பது பெரும்பாலும் வணிக கார்ப்பரேட் ஏணியில் ஏறுவதற்கும், அதிகாரம் மற்றும் சக்தியின் உச்சத்தை அடைவதற்கும், அதன் மூலம் நாம் மற்றவர்களை ஆதிக்கம் செலுத்துவதற்கும் ஆன ஒரு விருப்பமாகப் பார்க்கப்படுகிறது. இந்த விஷயத்தில், பலவீனமான மக்கள் மீது நாம் நமது இறையாண்மையைச் செலுத்தக்கூடிய ஆதிக்கத்திற்கான போட்டி விருப்பமானது, உள்ளார்ந்த மனிதத்தன்மையின் வெளிப்பாடு அல்ல, மாறாக மனிதனின் உள்ளார்ந்த பாவ வீழ்ச்சியின் வெளிப்பாடாகும். இது நம் ஒவ்வொருவரின் இதயத்திலும் மறைந்திருக்கும் இருதய ஊழலின் வெளிப்பாடாகும்.
மறுபுறம், சிறந்து விளங்குவதற்கான வலுவான நமது விருப்பம் சாதனையின் இலக்குகளை அடைவதற்கான முயற்சியால் தூண்டப்படலாம். ஒவ்வொரு மனிதனுக்கும் இயல்பாகவே இருக்கும் முக்கியத்துவத்திற்கான ஆசை என்பதுவே ஒரு பாவமான பசி அல்ல. நமது நீதியான முக்கியத்துவத்திற்கான ஆசை நம்மைப் படைத்தவரால் நமக்குக் கொடுக்கப்பட்டது என்று நான் நம்புகிறேன். அவருடைய சாயலில் படைக்கப்பட்ட அவருடைய படைப்புகளாக, நம்மிடம் உள்ள கண்ணியம் சுய உள்ளார்ந்ததல்ல, மாறாக அது வெளியிலிருந்து அருளப்பட்டது என்பதை நாம் அறிவோம். அதாவது, அது கடவுளால் நமக்கு அளிக்கப்பட்ட ஒரு கண்ணியம். கடவுள் நம்மை மதிப்புமிக்கவர்கள் என்று அறிவிப்பதால் நாம் மதிப்பையும் தகுதியையும் பெற்றுள்ளோம். நாம் செய்யக்கூடிய மிக உயர்ந்த அளவிலான மேன்மை மற்றும் சாதனைக்காக உழைக்க நம்மை அழைப்பது கடவுள்தான். இந்த உலகில் பயன்படுத்துவதற்காக அவருடைய கரத்தால் நாம் பரிசுகளைப் பெறுகிறோம். அந்தப் பரிசுகளை உண்மையுடன் பயன்படுத்துவதே நாம் சிறந்து விளங்க வேண்டும் என்ற நமது விருப்பத்தை தூண்ட வேண்டும். அதன் அடிப்படையில், நமது முக்கியத்துவத்திற்கான ஆசை ஒரு மோசமான விஷயம் அல்ல, ஆனால் உண்மையில், மனித இதயத்தில் துடிக்கும் இத்தகைய பரிசுத்த தகுதியான ஆசைகள் தவறான வழிக்குச் செல்லக்கூடும். முக்கியத்துவத்திற்கான ஆசை, தெய்வீக நெறிமுறைகளால் கட்டுப்படுத்தப்படாவிட்டால், அது எளிதில் நீட்சேயின் சுய அதிகார விருப்பமாக மாறிவிடும்.
நமது மேன்மைக்கான பரிசுத்த நியாயமான நோக்கம், கடவுளை மகிமைப்படுத்துவதை இறுதியாகக் கொண்டு சாதனையைத் தேடுவதாகும். அவருடைய மகிமைக்கு சாட்சியாக இருக்க வேண்டும் என்பதே நாம் படைக்கப்பட்டதன் முக்கிய நோக்கமாகும். கடவுளின் மகிமைக்கு சாட்சியாக நிற்காத ஒரு விஷயம், மனிதனின் மந்தநிலையின் மீதான அடிமைத்தனம் மற்றும் தற்போதைய நிலையை நோக்கிய ஒரு சுயதிருப்தியே தீமையானவை ஆகும். மாறாக, வேதவாக்கியங்கள் நம்மை ஒரு உயர்ந்த அழைப்பை — கிறிஸ்து இயேசுவுக்குள் நம்முடையதாக இருக்கும் உயர்ந்த அழைப்பை — தேட அழைக்கின்றன. நாம் சோம்பலில் மூழ்கிக் கிடக்கும் போது அத்தகைய உயர்ந்த அழைப்பை அடைய முடியாது. சோம்பேறித்தனமும் மந்தகுணமும் புனித வேதாகமத்தால் கடுமையாகக் கண்டிக்கப்படும் இரட்டைத் தீமைகளாகும். நாம் மேன்மையை அடையத் தவறுவதற்குக் மிகப்பெரிய காரணம் என்னவென்றால், மேன்மையை அடையக்கூடிய அளவிற்கு உழைக்க நாம் தயாராக இல்லை என்பதாகும். விடாமுயற்சியும் ஒழுக்கமான உழைப்பும் இல்லாமல் யாரும் எந்தவொரு தகுதியான செயலிலும் மேன்மையை அடைவதில்லை. இந்த அர்த்தத்தில் சாதனையின் எதிரி என்பது மந்தநிலையான சோம்பல் ஆகும். மறுபுறம், மிகவும் தூய்மையாக்கப்பட்ட மனித இதயத்தில் கூட, மேன்மைக்கான தேடல் எப்போதும் சிதைந்த சுய பெருமையின் உணர்வால் கறைபட்டிருக்கும். இந்த உலகில் சாத்தியமான மிக உயர்ந்த இலக்குகளை நாம் அடைந்தாலும், மனித சாதனைகளின் உச்சத்தை முன்னோடியில்லாத வகையில் நாம் தொட்டாலும், நாம் இன்னும் சிறந்த முறையில், கடவுளின் மகிமையிலும் கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு இருக்கும் விலைமதிப்பற்ற மீட்பிலும் மட்டுமே பெருமைப்பட உரிமை கொண்ட பயனற்ற ஊழியர்களாகவே இருப்பது நல்லது.
எனவே, நாம் சிறந்து விளங்க முயலுவோம், நாம் செய்யும் எல்லாவற்றிலும் மிக உயர்ந்த அளவிலான மேன்மையை அடைவதற்காக சகிப்புத்தன்மையின் மிக உயர்ந்த எல்லைகளுக்கு நம்மை நாமே தள்ளுவோம், அதே நேரத்தில் நமது உழைப்பின் மதிப்பை பெருமையின் தீய தூண்டுதல் கெடுத்துவிடாதபடி எப்போதும் விழிப்புடன் இருப்போம். நாம் கடினமாக உழைப்போம், கடவுளின் மகிமைக்காக சிறந்து விளங்குவோம். கடவுள் ஒருவருக்கே மகிமை.
இந்தக் கட்டுரை முதலில் லிகோனியர் மினிஸ்ட்ரீஸ் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.


