
எசேக்கியேல் புத்தகத்தைப் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டிய மூன்று காரியங்கள்
29-04-2025
எரேமியா புத்தகத்தைப் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டிய மூன்று காரியங்கள்
06-05-2025தானியேலைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 3 பிரதான காரிங்கள்

பழைய ஏற்பாட்டில் தானியேல் புத்தகமானது தனித்துவமானது, ஏனெனில் பழைய ஏற்பாட்டில் இஸ்ரவேல் மக்களுடைய மீட்புக்கான தீர்க்கதரிசனத்துக்கும், புதிய ஏற்பாட்டில் அந்த தீர்க்கதரிசத்தினுடைய நிறைவேறுதலான மேசியாவாகிய இயேசுகிறிஸ்துவினுடைய வாழ்க்கை, மரணம், உயிர்த்தெழுதல் மற்றும் பரமேறுதல் ஆகியவற்றினுடைய நிறைவேறுதலுக்கும் வேண்டிய எல்லாவற்றையும் உள்ளடக்கி, ஒரு திருப்புமுனையாக இந்த புத்தகம் காணப்படுகிறது. இந்த புத்தகம் ஆழமான பொருளடக்கத்தை கொண்டிருப்பதாலும், சிக்கலானதாகவும் இருப்பதால் இதை சுருக்கமாக விவரிப்பது சற்று கடினமாகவே காணப்படுகிறது. இருப்பினும், தற்காலத்தில் இந்த புத்தகத்தை வாசிப்பவர்களுக்கு அதைப் புரிந்துகொள்வதற்கான மூன்று முக்கிய சத்தியங்கள் உள்ளன.
1. தொடக்கத்தில் சொல்லப்பட்ட வரலாற்று சம்பவங்கள் (அதிகாரங்கள் 1–6) இப்புத்தகத்தின் பிற்கால தீர்க்கதரிசனத்துக்கு (அதிகாரங்கள் 7–12) நம்பகத்தன்மையை அளிக்கின்றன.
பெரும்பாலும் அராமிக் மொழியில் எழுதப்பட்ட தானியேலின் தொடக்க அதிகாரங்களில் உள்ள வரலாற்று சம்பவங்கள், கி.மு. 605 ல், பாபிலோனில் சிறைபிடிக்கப்பட்ட ஆரம்பகாலகட்டத்தில் யூத சந்ததிகளின் நிகழ்வுகளை நமக்கு படம் பிடித்து காட்டுகின்றன. அங்கே அவர்கள் தங்களை சிறை பிடித்தவர்களால் மிகுந்த துன்பங்களை சந்தித்தது மட்டுமல்ல தேவனை அவர்கள் சார்ந்திருந்தபொழுது தேவன் அவர்களுக்கு அளித்த ஆறுதலையும், வெற்றியையும் ஒருங்கிணைந்தே வெளிப்படுத்துகிறது. தானியேல் மற்றும் அவரது நண்பர்களான சாத்ராக், மேஷாக் மற்றும் ஆபேத்நேகோ பற்றிய நிகழ்வானது, எகிப்தில் யோசேப்பின் சரித்திரத்தோடு மொழி மற்றும் இலக்கிய ரீதியாக தொடர்புடையதாய் இருக்கிறது. உதாரணமாக, தானியேல் மற்றும் யோசேப்பு இருவரும் பார்வைக்கு அழகானவர்கள் என்ற ஒரே வார்த்தையாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது (ஆதி. 39:6; தானி. 1:4). இரண்டு நிகழ்வுகளிலும், ராஜாக்களுக்கு துக்கத்தை உண்டாக்கின சொப்பனத்திற்கான விளக்கத்தையும், அதற்காக எதிர்காலத்தில் நிகழப்போகிற தேவனுடைய திட்டத்தையும் வெளிப்படுத்துகின்றன. மேலும் ஒவ்வொரு நிகழ்வுகளிலும், அவற்றை ஒன்றோடொன்று இணைக்கும்படியாக, ஒரே மாதிரியான, பல எபிரேய வார்த்தைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. யோசேப்பைப் போலவே, தானியேலும் அவரது நண்பர்களும் ஒரு புறஜாதி ராஜாவின் அதிகாரத்திற்கு கீழாக பணியாற்றும்போது அவர்கள் எப்படி தேவனுடைய அழைப்புக்கு உண்மையுள்ளவர்களாக இருந்தார்கள் என்றும், இதன் விளைவாக, தேவன் அவர்களுக்கு எண்ணிப்பார்க்க முடியாத ஒரு மிகப்பெரிய பதவியையும், செல்வ செழிப்பையும் கொடுத்தது மட்டுமல்ல, அவர்களுடைய கழுத்தில் பொன் சரப்பணியையும் தரிப்பிக்கப்படுகிற ஒரே மாதிரியான சம்பவங்களை பார்க்க முடிகிறது . (ஆதி. 41:42; தானி. 5:29).
எங்கும் சிதறியிருந்த இஸ்ரவேலர்களுக்கும், மேதிய-பாரசீக கூட்டமைப்பால், பாபிலோன் வீழ்ச்சியடைந்த பிறகு கி.மு. 536 ல் எருசலேமுக்குத் திரும்பிச் சென்றவர்களுக்கும் மீண்டும் உயிர்மீட்சியை தரக்கூடிய தானியேலின் தீர்க்கதரிசன வசனத்தை உறுதிப்படுத்துவதற்கும், பாடுகளின் மத்தியில் அவர்களுடைய உண்மைத் தன்மையானது அவசியமாய் இருக்கிறது. தானியேலின் முதல் தீர்க்கதரிசனத்தில், சிறையிருப்புக்குட்பட்டவர்கள் மீட்கப்படுவதற்கு ஏழு வாரங்கள் செல்லும் என்ற சத்தியத்திற்கும் இது மிகவும் முக்கியமானதாக இருக்கிறது (தானி. 9:24).
2. எருசலேம் திரும்ப கட்டப்படுவதற்கு ஏழு வாரங்கள் செல்லும் என்ற தானியலில் சொல்லப்பட்ட சத்தியமானது, பழைய ஏற்பாட்டின் நிகழ்வுகளுக்கும், இயேசுவினுடைய ஊழியத்திற்கும் இடையே ஒரு இணைப்புபாலத்தை உருவாக்குகிறது.
மோசேயின் காலத்திலிருந்தே, ஒரு பெரிய தேசத்தினுடைய சிறையிருப்பும், அதனுடைய மீட்பும் இஸ்ரவேல் ஜனங்களுக்கு முன்பாக காட்சிப்படுத்தப்படுகின்றன (உபா. 28:64–68; 30:1–10). லேவியராகமம் 26 ஆம் அதிகாரம் முழுவதும், சிறையிருப்புக்குட்பட்ட இஸ்ரவேல் ஜனங்கள் தொடர்ந்து தேவனுக்கு செவிகொடாதிருந்தால், அவர்கள் பாவங்களினிமித்தம் அவர்களை ஏழத்தனையாக தண்டிப்பேன் என்று தேவன் மோசேயிடம் சொல்லுகிறதை பார்க்கலாம் (லேவி. 26:18, 21, 24, 28).
எரேமியாவின் காலகட்டத்தில், அவர்கள் சிறையிருப்புக்குட்படுவதற்கான எச்சரிப்பின் செய்தியினுடைய விளைவானது அவர்களை வரவிருக்கும் அழிவுக்கு நேராக வழிநடத்தினது. அவர்கள் மனந்திரும்புவதற்கான காலமும் கடந்துபோனது (எரே. 19). சிறையிருப்பு சமீபித்துக் கொண்டிருப்பது மட்டுமல்ல, அது எழுபது ஆண்டுகள் நீடிக்கும் என்றும் எரேமியா தீர்க்கதரிசி சொல்லுகிறார் (எரே. 25:11; 29:10). தானியேல் இந்தப் பகுதிகளையெல்லாம் ஆராய்ந்து அறிந்ததினாலேயே, தானியேல் 9 ஆம் அதிகாரத்தில் இடம் பெற்றுள்ள மனந்திரும்புதலுக்கான ஜெபத்திற்கு நேராக அவரை வழிநடத்திற்று. இஸ்ரவேல் மக்கள் தங்கள் பாவங்களுக்காக மனந்திரும்புவது மட்டுமல்ல, தங்கள் இரட்சிப்பின் தேவனிடம் முழு இருதயத்துடன் திரும்பும் வரையிலும், அவர்களுடைய சிறையிருப்பு முடிவுக்கு வராது என்பதையும் தானியேல் அறிந்திருந்தார். தானியேலுடைய நீதியான ஜெபத்தின் காரணமாக, சிறையிருப்பானது ஏழு மடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்ற செய்தியை அறிவிக்க கர்த்தர் ஒரு தூதனை (காபிரியேல்) அனுப்பினார். “எருசலேமின் அழிவின் நாட்கள்” முடிவதற்கு எழுபது ஆண்டுகள் அல்ல, ஏழேழுபது அல்லது 490 ஆண்டுகள் ஆகும் என்றுரைத்தார். இப்புத்தகத்தின் மீதமுள்ள பகுதியானது தானியேலின் காலத்திற்கும் தேவனுடைய ராஜ்யத்தின் வருகைக்கும் இடையில் நடக்கும் நிகழ்வுகளை விவரிக்கும் தொடர்ச்சியான தரிசனங்களை வெளிப்படுத்துகிறது.
3. 7 முதல் 12 வரையிலான அதிகாரங்களில் உள்ள தானியேலின் தரிசனங்கள், இடைப்பட்ட காலகட்டத்தில் நடக்கப்போகும் உலகளாவிய நிகழ்வின்போது, மீட்பிற்கான தேவனுடைய திட்டத்தை அவருடைய ஜனங்கள் சார்ந்து வாழும்படியாக ஊக்கப்படுத்துகிறது.
தானியேலின் இரண்டாம் பாதியில் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம் என்னவென்றால், மேசியாவின் வருகைக்கு முன்பு நடக்கும் நிகழ்வுகளைப் பற்றிய தரிசனங்கள் எவ்வளவு துல்லியமானவை மற்றும் விரிவானவை என்பதுதான். எதிர்காலத்தில் நடக்கப்போகும் நிகழ்வுகளை தீர்க்கதரிசி ஏன் இவ்வளவு நுணுக்கமாக விவரிக்க வேண்டும்? மற்ற தீர்க்கதரிசிகள் எதிர்காலத்தைப் பற்றிய தங்கள் தீர்க்கதரிசனங்களில் ஒரு உணர்ச்சி வயப்படக்கூடிய, தெளிவற்ற தன்மையை வெளிப்படுத்துகிறவர்களாக காணப்படுகிறார்கள். ஆனால் தானியேல் துல்லியமாக அதை விளக்கப்படுத்துகிறதை பார்க்கலாம். எருசலேமின் மறுகட்டமைப்பு ஏழு மடங்கு ஒத்திவைக்கப்படுவதற்கான பதிலும் இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. அதை இன்னும் விரிவாக நாம் விளக்கப்படுத்த வேண்டுமானால், உலகளாவிய வரலாற்றில், தொடர்ச்சியாக பேரரசுகள் எழுந்து வீழ்ச்சியடைந்தாலும், உடன்படிக்கையின் ஜனங்கள் தொடர்ந்து கர்த்தரில் நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும் தீர்க்கதரிசி ஊக்கப்படுத்துகிறார். முழு மனுகுலத்தின் வரலாற்றின் மீதும் தேவன் சர்வ இறையாண்மை கொண்டவராக இருப்பதால், அவருடைய ஜனங்கள் தொடர்ந்து தங்களுடைய ஒவ்வொரு பணியிலும் அவருக்கு உண்மையுள்ளவர்களாக இருந்து, அவருடைய உடன்படிக்கையின் பிள்ளைகளாயிருப்பதினால் வரக்கூடிய எல்லா சிறப்புரிமைகளையும் அனுபவிக்கவும் அழைக்கப்படுகிறார்கள். இவைகள் எல்லாவற்றின் மத்தியிலும் அவர்கள் தங்கள் இரட்சிப்பின் தேவனாகிய கர்த்தரிடத்தில் விசுவாசம் வைத்து, அவர் நிச்சயம் ஒரு நாள் தங்களை கட்டாயம் மீட்டுக் கொள்வார் என்று உறுதியாக நம்ப வேண்டும்.
வரலாற்று நிகழ்வுகளின் ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும், நீதிமான்களாகிய இஸ்ரவேலில் மீதியானவர்கள் தொடர்ந்து தேவனுக்காக செயல்பட்டதை போல, இன்றைய காலங்களில் மேசியாவை பின்பற்றுகிறவர்களும் தானியலுடைய தீர்க்கதரிசன புத்தகத்தில் நம்பிக்கை கொண்டவர்களாக காணப்பட வேண்டும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அவர் நிர்ணயித்த மீட்பிற்கான திட்டத்தின் நிறைவேறுதலுக்காகவும், நமது தேவனுடைய இரண்டாம் வருகைக்காகவும் காத்திருக்கும் தேவனுடைய பிள்ளைகளான நமக்கும் கடமைகளும், சிறப்புரிமைகளும் உள்ளன (2 பேதுரு 3:1–13). உலக சிறையிருப்புக்குட்பட்டவர்களாகிய நாமும் உலகளாவிய எல்லாவிதமான நிகழ்வுகளின் மத்தியிலும்,மேசியாவாகிய ராஜாவை நோக்கி பார்த்து அவரை விசுவாசிக்கவும், சேவிக்கவும் வேண்டும் (1 பேதுரு 1:1; யாக்கோபு 1:1 ஐப் பார்க்கவும்). தானியேல் மற்றும் அவரது நண்பர்களைப் போல, நாங்கள் உலகம் சார்ந்த அரசியல் ரீதியான காரியங்களில் கவனம் கொள்ளாமல், எப்படிப்பட்ட நிகழ்வுகள் நிகழ்ந்தாலும், இலவசமாக, மாறாத தன்மையோடு நிர்ணயிக்கப்பட்ட உன்னதமானநமது மீட்பின் ராஜாவையே நாம் சேவிக்க வேண்டும் (வெஸ்ட்மின்ஸ்டர் விசுவாச அறிக்கை 3.1).
இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.