
நித்திய ஜீவனுக்கு ஏதுவான மெய்யான மனந்திரும்புதல்
01-01-2026
நியாயாதிபதிகளிடமிருந்து கற்றுக்கொள்ளும் பாடம்
13-01-2026பிரயாணம் செய்யும் மக்கள்
நாம் நமது வீட்டில் இருப்பதென்பதே ஓர் தனி சிறப்பான காரியம் அல்லவா! நான் பயணம் செய்யும் ஒவ்வொருமுறையும் இது எனது நினைவில் வருகிறது. இந்த சிறு கட்டுரையை நான் எழுதுகையில், கரீபியனில் லிகோனியரின் ஆய்விலிருந்து நாங்கள் திரும்பி வந்து சில வாரங்களே ஆகின்றன. லிகோனியரின் நண்பர்கள் மற்றும் உதவியாளர்களுடன் அற்புதமான படிப்பையும் நேரத்தையும் நாங்கள் கழித்தோம், அவர்களில் அநேகர் இப்பொழுது இந்த கட்டுரையைப் படித்துக்கொண்டிருக்கலாம். இந்த சுற்றுப்பயணம் எனக்கு மகிழ்ச்சியைத் தந்திருந்தாலும், நான் என்னுடைய வீட்டிற்கு திரும்புவதை எண்ணி மகிழ்ந்தேன். ஒவ்வொருமுறையும் நான் பயணம் செய்கையில் இதையே உணர்கிறேன். நான் எனது சொந்த நாட்டை நேசிக்கிறேன், ஓர் ஆனந்தமான பயணத்திற்குப் பிறகு மீண்டும் அமெரிக்காவிற்கு வருவதில் நான் சந்தோஷமடைகிறேன்.
அமெரிக்காவிற்கு நான் மீண்டும் வருவதில் மகிழ்ச்சியடைகிறேன் என்றாலும், அங்கு வந்துவிட்டு மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு விரும்புகிறேன் என்பதை நான் ஒத்துக்கொண்டுதான் ஆகவேண்டும். கடைசியாக, அமெரிக்கா என்பது ஓர் தங்கும் விடுதி போன்றுதான், எனது மெய்யான வீடாகிய பரலோக நகரத்திற்கு செல்லும் வழியில் ஓய்வெடுக்கின்ற ஓர் இடம் அவ்வளவுதான். ஒரு கிறிஸ்தவனாக நான் என் இரட்சகருடன் பரலோகில் இருக்கும்வரை நான் இருக்கும் இந்த இடம் உண்மையான வீடல்ல என்பதை அறிவேன். பழைய பரிசுத்தவான் இவ்வாறு கூறுகிறார்: “இவ்வுலகம் என்னுடைய வீடல்ல… வெறுமனே நான் இதன் வழியாக செல்கிறேன்.”
நாம் அழைப்பதுபோல் தேவனுடைய மக்கள் எப்பொழுதும் “பிரயாணப்படும் மக்களாகவே” உள்ளனர். யாத்திராமத்தில் இஸ்ரவேலருக்கு பழைய உடன்படிக்கையின் திருச்சபையின் சட்டம் கொடுத்த பெயர்கள், “பிரயாணிகள் மற்றும் பரதேசிகள்”. வனாந்திரந்தில் நாடோடி வாழ்க்கை வாழ்ந்த அவர்களுக்கு நிரந்தர தேசம் இல்லாதிருந்தது. அவர்களின் ஆராதனைக்குரிய இடமான ஆசரிப்புக் கூடாரம் காணப்பட்டாலும், தேவன் அவர்களை நடப்பதற்கு கட்டளையிடும் போது, அந்த கூடாரம் பேர்க்கப்பட்டு, சுமக்கப்பட்டு புதிய பாளையத்தை நோக்கி நகர வேண்டும். கிறிஸ்துவின் மானுட பிறப்பைப் பற்றிய யோவானின் வாக்கியத்தில் இதன் கருப்பொருள் காண்பிக்கப்படுகிறது. “அந்த வார்த்தை மாம்சமாகி நமக்குள்ளே வாசம்பண்ணினார்.” (யோவான் 1:14). இதில் “வாசம்’ என்ற வார்த்தைக்கான கிரேக்க பதம் “கூடாரம்” என்பதாகும். கிறிஸ்துவே மெய்யாகவே நமக்குள்ளே கூடாரம் போட்டு வாசம் பண்ணுகிறார்.
இதன் காரணமாகவே, கிறிஸ்துவே வேதாகமத்தில் வெளிப்படுத்தப்பட்ட இறுதி யாத்ரீகர் ஆவார். மானுடப்பிறப்பில் அவர் மேன்மையான பயணியாக மாறி, நமக்குப் பதிலாக பரலோகத்தில் தமது வீட்டைவிட்டு வந்தார். பரலோக வீட்டிற்கு பயணம் செய்யும் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோரின் பிள்ளைகளோடு அவரும் செல்வதற்கு இந்த உலகத்திற்கு கிறிஸ்து வந்தார்.
கர்த்தர் பரலோக வீட்டைப் பற்றிய காட்சியை பலவழிகளில் குறிப்பாக நாம் சபையின் ஆராதனைக்காக ஒன்றுக்கூடும்போது நமக்கு வெளிப்படுத்துகிறார்.
எபிரெயர் 11:13 கூறுகிறது: பழைய உடன்படிக்கையின் விசுவாசிகள் தூரத்திலுள்ள வாக்குத்தத்தங்களை நம்பி, “பூமியின்மேல் தங்களை அந்நியரும் பரதேசிகளும் என்று அறிக்கையிட்டு, விசுவாசத்தோடே மரித்தார்கள்.” மோசேயும் ஆபிரகாமும் மற்றும் பிற விசுவாசிகளும் தேவன் வாக்குத்தத்தம் பண்ணின பரலோக வீட்டை நாடி, விசுவாசத்தினாலே இந்த பூலோக வீட்டை விட்டு சென்றார்கள். “அதையல்ல, அதிலும் மேன்மையான பரமதேசத்தையே விரும்பினார்கள். ஆகையால் தேவன் அவர்களுடைய தேவனென்னப்பட வெட்கப்படுகிறதில்லை. அவர்களுக்கு ஒரு நகரத்தை ஆயத்தம்பண்ணினாரே.” (எபிரேயர் 11:16).
எபிரெயர் 11- ல் உள்ள விசுவாச பட்டியல் பழைய உடன்படிக்கை விசுவாசிகளை மையமாகக் கொண்டிருந்தாலும், கடவுளுடைய மக்கள் கானானில் குடியேறினாலும், முதலில் எருசலேமைக் கைப்பற்றினாலும், அல்லது நாடுகடத்தலுக்குப் பிறகு வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குத் திரும்பினாலும் அவர்களின் பிரயாணம் அத்தோடு முடிவடையவில்லை. கிறிஸ்தவ திருச்சபை என்பது ஒரு பிரயாண மக்கள். அப்போஸ்தலன் பேதுரு தெளிவாகக் கூறுகிறார்: “பிரியமானவர்களே, அந்நியர்களும், பரதேசிகளுமாகிய நீங்கள், ஆத்துமாவுக்கு எதிராகப் போரிடும் மாம்ச இச்சைகளை விட்டு விலகுங்கள்” ( 1 பேதுரு 2:11 ;). நாம் இன்னும் பரிசுத்த நகரத்தையும் பரலோக எருசலேமையும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.காரணம் அந்த வீட்டிற்காகத்தான் நாம் சிருஷ்டிக்கப்பட்டோம். “மேலும், பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன், அது: இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார், அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார்.”(வெளி 21:3).
கர்த்தர் பரலோக வீட்டைப் பற்றிய காட்சியை பலவழிகளில் குறிப்பாக நாம் சபையின் ஆராதனைக்காக ஒன்றுக்கூடும்போது நமக்கு அளிக்கிறார். இதை எனது உள்ளூர் சபையான செயிண்ட் ஆண்ட்ரூஸ் ஆலயத்தில் அனுபவித்திருக்கிறேன். அங்கு ஒவ்வொரு கர்த்தருடைய நாளிலும் நாங்கள் ஒன்றுக்கூடி உலகத்திலிருந்து பரிசுத்தமான இடத்திற்கு செல்லும் வாசலைக் கடக்கிறோம். மற்ற வெளிநாடுகளில் நான் ஆராதிக்கும்போதும் இதை நான் பார்த்திருக்கிறேன்.
சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு, கம்யூனிஸ்ட் ஆட்சியின் போது கிறிஸ்தவ மிஷனரிகளுக்கு மூடப்பட்டிருந்த பல நாடுகளில் பிரசங்கிக்கவும் கற்பிக்கவும் கிழக்கு ஐரோப்பா வழியாக நான் பயணம் செய்தேன், அந்த தடை சில ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. டிரான்சில்வேனியாவில் உள்ள ஒரு தேவாலயத்தில், ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை பிரசங்கிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது, நான் சபையைப் பார்த்தபோது, பல வயதான பெண்களைக் கண்டேன், அவர்களின் முகங்கள் பழமையான கருவிகளால் பல ஆண்டுகளாக நிலத்தை உழுததால் பிறந்த சுருக்கங்களால் பதிந்திருந்தன. அவர்கள் தலை முதல் கால் வரை கருப்பு நிறத்தில் – கருப்பு பாவாடை, கருப்பு ரவிக்கை மற்றும் கருப்பு பாபுஷ்காக்கள் – அணிந்திருந்தாலும், அவர்களைப் பற்றி ஒரு அமைதி இருந்தது. அவர்கள் கிட்டத்தட்ட தேவதூதர்களைப் போல தோற்றமளித்தனர். இந்தப் பெண்கள் என் பிரசங்கத்தைக் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார்கள், சில சமயங்களில் அவர்களின் கன்னங்களில் ஒன்றில் கண்ணீர் வழிவதைக் கூட நான் கண்டேன்.
அங்கே நின்றுகொண்டு, என்னுடைய பிரசங்கம் அவர்களுடைய தாய்மொழியான ரோமானிய மொழியில் மொழிபெயர்க்கப்படுவதைக் கேட்டேன், என்ன நடக்கிறது என்பதைக் கண்டு நான் வியந்தேன். அவர்களுடன் ஒரு உண்மையான ஐக்கியத்தை நான் உணர்ந்தேன், இந்த உலகத்தில் இல்லாத ஒன்றிலிருந்து உருவான ஒரு பிணைப்பு அது. எங்களுக்குள் பொதுவானது எதுவும் இல்லை. நாங்கள் வெவ்வேறு மொழிகளைப் பேசினோம், வெவ்வேறு கலாச்சாரங்களைச் சேர்ந்தவர்கள், வெவ்வேறு பழக்கவழக்கங்களைப் பின்பற்றினோம், மற்றபடி எங்களை ஒன்றாக இணைக்க எதுவும் அங்கு இல்லை. ஆனால், கடவுளுடைய வார்த்தையின் மீது பகிரப்பட்ட அன்பு என்ற பிணைப்பை நாங்கள் கொண்டிருந்தோம். நாங்கள் அனைவரும் பரலோகக் குடிமக்களாக இருந்தோம், வெவ்வேறு தேசங்களில் இந்த உலகத்தைக் கடந்து சென்றோம், ஆனால் கிறிஸ்துவுடனான எங்கள் பொதுவான ஐக்கியத்தின் விளைவாக ஏற்பட்ட ஒரு ஆழமான ஒற்றுமை அங்கு இருந்தது. நானும் அந்த விவசாயப் பெண்களும் பரலோக நாட்டிற்குச் செல்லும் வழியில் யாத்ரீகர்களாக இருந்தோம்.
இந்த உலகத்திலும் நமது பூமிக்குரிய வீடுகளிலும் கடவுள் நமக்கு பல ஆசீர்வாதங்களைத் தருகிறார். இருப்பினும், “இந்த உலகம் நமது வீடு அல்ல …” “நாம் வெறும் கடந்து செல்பவர்கள் மட்டுமே.”
இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.


