
கிறிஸ்தவ வாழ்விற்கான ஓர் தீர்மானம்
21-04-2026
கிறிஸ்துவுக்குள்” இருப்பது என்றால் என்ன?
28-04-2026இயேசு பரலோகத்திற்கு ஏறிச் செல்வதற்கு முன் அளித்த வாக்குறுதி என்ன?
இயேசு பரலோகத்திற்கு ஏறிச் செல்வதற்கு முன்பாகத் தனது அப்போஸ்தலர்களுக்கு அளித்த கடைசி வாக்குறுதி என்னவென்றால் அவர்கள் பூமியின் கடைசிப்பரியந்தம் சுவிசேஷத்தைக் கொண்டு செல்வதற்கான வல்லமையைப் பெறும்படி, பரிசுத்த ஆவியானவர் அவர்கள்மேல் வருவார் என்பதாகும் (அப்போஸ்தலர் 1:8). இந்த வாக்குறுதி நிறைவேறியதை ஆசிரியராகிய லூக்கா அப்போஸ்தலர் 2-ஆம் அதிகாரத்தில் பதிவு செய்துள்ளார். பெந்தெகொஸ்தே நாளில் திருச்சபையின் மேல் பரிசுத்த ஆவியானவர் எவ்வாறு இறங்கி வந்தார் என்பதை இது நமக்குக் நினைவூட்டுகிறது.
பழைய உடன்படிக்கையின் கீழ், இஸ்ரவேலர்கள் எருசலேமுக்குச் செல்ல வேண்டிய மூன்று முக்கிய பண்டிகைகளில் பெந்தெகொஸ்தே பண்டிகை நாளும் ஒன்றாகும் (உபாகமம் 16). இது ‘வாரங்களின் பண்டிகை’ என்றும் அழைக்கப்பட்டது; ஏனெனில் இது முதற்பலன்களின் பண்டிகைக்கு (Feast of Firstfruits) ஐம்பது நாட்கள் அல்லது ஏழு வாரங்களுக்குப் பிறகு கொண்டாடப்பட்டது. பழைய உடன்படிக்கையின் கீழ் வசந்த கால தானிய அறுவடையின் முடிவாக பெந்தெகொஸ்தே நாள் இருந்தது (லேவியராகமம் 23:4–22). காலப்போக்கில், யூதர்கள் பெந்தெகொஸ்தே பண்டிகையைச் சீனாய் மலையில் நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்ட நிகழ்வோடு தொடர்புபடுத்தினர். ஏனெனில், எகிப்திலிருந்து வெளியேறியதற்கும் நியாயப்பிரமாணத்தைப் பெற்றதற்கும் இடையில் சுமார் ஐம்பது நாட்கள் கழிந்திருந்தன (யாத்திராகமம் 19:1).
நாம் புதிய உடன்படிக்கைக்குள் நுழையும்போது, இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலைத் தொடர்ந்து வந்த பெந்தெகொஸ்தே நாளில், பரிசுத்த ஆவியானவர் தேவனுடைய மக்கள்மேல் இறங்கினார். ஆவியானவர் “பலத்த காற்று வீசும்” சத்தத்துடன் வந்தார். கிரேக்கம் மற்றும் எபிரேய மொழிகளில் “ஆவி” (spirit) என்ற சொல்லும் “காற்று” (wind) என்ற சொல்லும் ஒன்றே. வேதாகமமும் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையான கிரியையை ஒரு பலத்த காற்று அல்லது சுவாசமாகவே குறிப்பிடுகிறது (எசேக்கியேல் 37:1–14; யோவான் 3:8). காற்றின் சத்தத்துடன், பிளக்கப்பட்ட அக்கினி நாவுகள் போன்ற உருவங்கள் தோன்றி, அங்கிருந்த மக்களின் தலைமேல் அமர்ந்தன (அப்போஸ்தலர் 2:3). அக்கினியானது தெய்வீகப் பிரசன்னத்தையும், மேசியா வாக்குறுதி அளித்திருந்த பரிசுத்தமாக்கும் ஞானஸ்நானத்தையும் குறித்தது (யாத்திராகமம் 3:1–6; லூக்கா 3:15–17).
ஒரு புதிய அனுபவம்
நிச்சயமாக, புதிய உடன்படிக்கையின் பெந்தெகொஸ்தே நாளுக்கு முன்பே பரிசுத்த ஆவியானவர் பழைய உடன்படிக்கை சமூகத்துடன் இருந்தார். ஏனெனில் அவரே பழைய உடன்படிக்கை உறுப்பினர்களை மறுபடியும் பிறக்கச் செய்து, அவர்களுக்கு விசுவாசத்தின் வரத்தை அளித்தார். எந்தவொரு உடன்படிக்கையின் கீழும் எவரேனும் ஒரு நபர் உண்மையான தேவன் மீது விசுவாசம் கொள்கிறார் என்றால், அவர் ஆவியினால் மறுபடியும் பிறந்திருப்பதாலேயே அது சாத்தியமாகும் (யோவான் 3:3). இருப்பினும், புதிய உடன்படிக்கையில் ஆவியானவரின் அனுபவம் பழையதைவிட மிகவும் மேலானது; ஏனெனில் இப்போது அனைத்து கிறிஸ்தவர்களும் ஊழியத்திற்கான ஆவியின் வரங்களைக் பெற்றுக்கொள்ளுகிறார்கள்.
இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.


