3-Things-about-Zephaniah
செப்பனியா புத்தகத்தைப் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டிய மூன்று காரியங்கள்
27-05-2025
3-Things-about-Zephaniah
செப்பனியா புத்தகத்தைப் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டிய மூன்று காரியங்கள்
27-05-2025

போதக நிருபங்களை வாசிப்பது எப்படி?

How-to-Read-the-Pastoral-Epistles

பவுலின் பதின்மூன்று நிருபங்களில், மூன்று போதக நிருபங்கள் மட்டும் தனித்துவமானவை. ஏனெனில் அவை பவுலின் உடன் ஊழியர்களான மற்றும் சபைகளில் போதக மேற்பார்வையைச் செய்து வந்த தீமோத்தேயுவுக்கும், தீத்துவுக்கும் எழுதப்பட்டவையாகும். இவ்விருவரும் கள்ளப் போதகர்களையும், போதக கடமைகளை சவாலாக்கக்கூடிய பல சோதனைகளையும் சந்திக்க வேண்டியிருந்தது. இந்நிருபங்கள் தீமோத்தேயுவுக்கும், தீத்துவுக்கும் எழுதப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தாலும், “கிருபை உங்களோடு இருப்பதாக” என்னும் பவுலின் ஆசீர்வாத வார்த்தைகளுடன் முடிவடைகின்றன: இதில்  –  “உங்களுடனே” என்ற கிரேக்க மூல வார்த்தையானது பன்மை தன்மை கொண்டதாயிருக்கிறது. எனவே ஒரு வகையில், அவை  பொதுவானதாகவும் காணப்படுகிறது. சபையார் அனைவருக்கும் இந்த நிருபங்கள் வாசிக்கப்படும்படியாகவே பவுல் இவ்விதமாக எழுதினார். இதை மனதில் கொண்டு, போதக நிருபங்களை வாசிப்பதற்கான நான்கு முக்கியமான குறிப்புகளைப் பற்றி நாம் சிந்திக்கலாம்.

1. கிறிஸ்துவின் சரீரமாகிய சபையையும், அதில் உங்கள் பங்களிப்பையும் மையமாகக் கொண்டு போதக நிருபங்களை வாசிக்க வேண்டும்.

இன்றைக்கு அநேக கிறிஸ்தவர்கள் சபையின் முக்கியத்துவத்தைப் பற்றிய உணர்வை இழந்துவிட்டனர். அவர்களுக்கு கிறிஸ்தவ வாழ்க்கை என்பது, கிறிஸ்துவின் சபையாகிய சரீரத்தில் செயல்படக்கூடிய ஒரு அங்கமாக இருப்பதைவிட,  கிறிஸ்துவுடனான தனிப்பட்ட உறவே மிக முக்கியம் என்று எண்ணுகிறார்கள்.  போதக நிருபங்களில்  சபையின் ஆரோக்கியம் மற்றும் சபையின் உண்மைத்தன்மைக்கே பவுல் அதிக முக்கியத்துவத்தை கொடுக்கிறார். ஏனெனில், தேவனுடைய ஜனங்கள் போஷிக்கப்பட்டு, விசுவாசத்தில் வளரும்படியான இடம் திருச்சபையே. இதனால்தான் பவுல், மூப்பர்கள் (1 தீமோத்தேயு 3:1–7; தீத்து 1:5–16) மற்றும் உதவிக்காரர்கள் (1 தீமோத்தேயு 3:8–13) உட்பட, தேவபக்தியுள்ள தலைமைத்துவத்திற்கான தகுதிகளை விரிவாக இந்நிருபங்களில் பட்டியலிடுகிறார். இதனால்தான் பவுல், சபையின் போதிக்கும் மற்றும் பிரசங்கிக்கும் ஊழியத்திற்குத் தன்னை அர்ப்பணிக்க வேண்டும் என்று தீமோத்தேயுவை மீண்டும் மீண்டும் உற்சாகப்படுத்துகிறார். ஒரு ஆரோக்கியமான  சபை உருவாவதற்கு, தேவனுடைய ஜனங்கள், வாசிக்கப்படும் மற்றும் பிரசிங்கிக்கப்படும் தேவனுடைய வார்த்தையாகிய மன்னாவினால் தொடர்ந்து  போஷிக்கப்பட வேண்டும்.

தனிநபர்களுக்கு இப்போதக நிருபங்கள் எழுதப்பட்டிருந்தாலும், கிறிஸ்துவின் சபையைக் கட்டியெழுப்புவதும், செயல்படக்கூடிய ஒரு  சபை வாழ்க்கையை ஊக்குவிப்பதும் இதனுடைய நோக்கமாக இருக்கிறது. இதில் ஒன்றாக கூடி ஆராதித்தல் (1 தீமோத்தேயு 2; 4:13), ஒன்றாகப் பணிபுரிதல் மற்றும் சேவை செய்தல் (2 தீமோத்தேயு 2:21; தீத்து 3:1), சபையில் உள்ள  மற்றவர்களுடன் தாராள மனப்பான்மையுடன் இருத்தல் (1 தீமோத்தேயு 6:17–19), மற்றும் உண்மைத் தன்மையுடன் ஒருவருக்கொருவர் சேவை செய்தல் ஆகியவை அடங்கும். போதக நிருபங்களில்,  கிறிஸ்தவ வாழ்க்கைக்கு மையமானதாக  சபையையே பவுல் முன்வைக்கிறார், இது இது ஒரு மாற்று யோசனையோ அல்லது கூடுதலாக சேர்க்கப்பட்ட ஒன்றோ அல்ல.

2. கள்ளப் போதனையின் ஆபத்தை இனங்கண்டு கொள்வதும் அதை எதிர்த்து போராட வேண்டிய அவசியத்தையும் உணர்த்துகிறது.

மற்ற எந்த காரியங்களை காட்டிலும், கள்ளப் போதனையை எதிர்த்துப் போராடுவதற்கே பவுல் போதக நிருபங்களில் அதிக நேரம் எடுத்துக்கொள்கிறார். 1 தீமோத்தேயுவின் முழு நிருபத்திலும்,   கள்ளப்  போதகர்களை பற்றி பேசுவதற்கு  அவர் மூன்று அதிகாரங்களை செலவிடுகிறார். உண்மையில், பவுலின் நிருபங்களில் அவருடைய காலகட்டத்தில், வழக்கமாக வரும் நன்றியுரைக்குப் பதிலாக, இந்நிருபத்தின் ஆரம்பத்தில் எபேசுவில் உள்ள கள்ளப் போதகர்களை உடனடியாக கண்டித்துப் பேசுகிறார்  (1 தீமோத்தேயு 1:3–11). மறுபடியுமாக 4 ஆம் அதிகாரத்திலும், திரும்ப 6 ஆம் அதிகாரத்திலும் பவுல் கள்ளபோதகர்களை பற்றி பேசுகிறார். கள்ளப் போதனைக்கு எதிராக போராடுவதை பற்றி 2 தீமோத்தேயு மற்றும் தீத்து ஆகிய நிருபங்களிலும் அவர் எடுத்துரைக்கிறார்.

 நிருபங்களை எழுதும் பொதுவான முறையை கூட  ஒதுக்கிவைத்துவிட்டு, பவுல் ஏன் இவ்வளவு தீவிரமாக கள்ளப் போதனையை எதிர்த்து பேச வேண்டும்? ஏனெனில் கள்ளப் போதனை என்பது  வாழ்வா சாவா என்கிற போராட்டமாகும். கிறிஸ்துவுக்குள்ளாக தேவன் வெளிப்படுத்தின சத்தியத்தை விசுவாசித்து, அதை தொடர்ந்து  பற்றிக்கொள்வதை பொறுத்தே இரட்சிப்பும் நித்திய ஜீவனும் அடங்கியிருக்கிறது. எனவே, பவுல் இதை மரணத்திற்கு ஒப்பான தீவிரமான செயலாகவே கருதுகிறார். ஆகவேதான் கலாத்தியா சபையில் காணப்பட்ட கள்ளப் போதனையைப் பற்றி பவுல்  “புளிப்புள்ள கொஞ்சமாவானது பிசைந்த மாவனைத்தையும் உப்பப்பண்ணும்” (கலாத்தியர் 5:9) என்று எச்சரிக்கிறார்.

கள்ளப் போதனையை எதிர்த்துப் போராடுவதின் மறுபக்கத்தில் சத்தியத்தை சரியாக போதிப்பதின் அவசியமும் அடங்கியிருக்கிறது. இது போதக நிருபங்களைப் படிப்பதற்கான மூன்றாவது குறிப்புக்கு நேராக நம்மை வழி நடத்துகிறது.

3. தேவனுடைய வார்த்தையே ஊழியத்தின் மையமாக இருக்கிறது என்பதை  கருத்தில் கொள்ளுங்கள்.

பவுல் சபையில் காணப்படும் பலதரப்பட்ட ஊழியங்களுக்கான வழிமுறைகளைத் தருகிறார், ஆனால் முக்கியமான ஊழியமாக தேவனுடைய வார்த்தையை போதிப்பதையும் பிரசங்கிப்பதையுமே அவர் பிரதானப்படுத்தி இங்கே பேசுகிறார். அவர் தீமோத்தேயுவை “வாசிக்கிறதிலும் புத்தி சொல்லுவதிலும் உபதேசிக்கிறதிலும் ஜாக்கிரதையாயிரு என்று வலியுறுத்துகிறார்  (1 தீமோத்தேயு 4:13). தேவனுடைய வார்த்தையை பிரசங்கிக்கிற ஊழியமே  விசுவாசத்திற்கு மிக முக்கியமானதாகும். தேவனுடைய வார்த்தையை மறுபடியும் மறுபடியும் கேட்பதன் மூலமாகவே விசுவாசம் வருகிறது. மேலும், தேவனுடைய வார்த்தைக்காக அமர்ந்திருந்து காத்திருப்பதன் மூலமாகவே தேவனுடைய பிள்ளைகளுடைய வாழ்க்கையில் விசுவாசமானது பலப்படுத்தப்படுகிறது. 2 தீமோத்தேயுவில், பவுல் தன் உடன் ஊழியனான தீமோத்தேயுவுக்கு  “சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய் திருவசனத்தை பிரசங்கம் பண்ணு ஏனென்றால் அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தை பொறுக்க மனதில்லாமல் செவித்தினவுள்ளவர்களாகி தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களை தங்களுக்கு திரளாக சேர்த்துக்கொண்டு” (2 தீமோத்தேயு 4:2–3) என்று எழுதுகிறார்.

சபையினுடைய ஊழியங்களில் பொதுவான ஜெபமும் அடங்கியிருக்கிறது, அதில் சபையில் காணப்படுகிறவர்களுக்காகவும், சபையில் காணப்படாத ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் , ஜெபித்தலும் உள்ளடங்கும் (1 தீமோத்தேயு 2:1–2). இதில் மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்களின் நேரடி ஊழியமும் உள்ளடங்கும். தேவனுடைய ஜனங்களை ஆவிக்குரிய ரீதியாக நடத்துவதற்கு, நல்ல மேய்ப்பர்களான தகுதியுள்ள மூப்பர்கள் தேவை. மற்றும் உதவிக்காரர்களாயிருக்கிறவர்கள் இரக்கத்தின் பணிக்காகவும், சரீரப் பிரகாரமான தேவைகளை சந்திக்கவும் நியமிக்கப்படுகிறார்கள். உதவிக்காரர்கள், பெரும்பாலும் தங்கள் வேலையை சபையில் பெரும்பாலானவர்களுக்குத் தெரியாமல் பின்னணியில் செய்தாலும், “நன்றாக ஊழியம் செய்கிறவர்களாகவும் கிறிஸ்து இயேசுவைப் பற்றும் விசுவாசத்தில் மிகுந்த தைரியத்தையும் அடைவார்கள்” (1 தீமோத்தேயு 3:13) என்ற அற்புதமான வாக்குத்தத்தத்தை தேவன் இங்கே கொடுக்கிறார். சபையினுடைய சரியான செயல்பாட்டிற்கு எல்லாவிதமான ஊழியங்களும்  இன்றியமையாதவை, ஆனாலும் தேவனுடைய வார்த்தையை பிரசங்கிப்பதே மையமாக காணப்பட வேண்டும்.

4. கிறிஸ்துவின் தேவபக்தியுள்ள சேவகனுக்குரிய இருதயத்தை கொண்டவர்களாய், உணர்வுபூர்வமாக போதக நிருபங்களை வாசியுங்கள்.

வரலாற்று பூர்வமாக, சபையில் உள்ள அநேகரால், பெரும்பாலும் எதிர்மறையாகவே அப்.பவுலை பற்றி பேசப்படுகிறது.   குட்டையாக, வழுக்கை தலையுடன், வில் போன்ற கால்களுடன், ஒரு பெரிய மூக்குடன், ஒரு புருவம் அற்றவராக, பொதுவாக முகத்தில் கோபத்துடன் காணப்படுவார் என்றும் பவுலினுடைய உடல் தோற்றத்தை பற்றி பிரபலமான சிந்தனைகளுண்டு. பவுல் மற்றவர்களிடம் எரிச்சல் உள்ளவராகவும், மக்களுடன் ஒத்துப் போகாதவராகவும் விவரிக்கப்பட்டுள்ளார். ஆறுதலின் மகனான பர்னபாவை  விட்டு அவர் பிரிந்து சென்றார். உடன் ஊழியனான மாற்கு தவறு செய்தபோது அவருக்கு, இரண்டாவது வாய்ப்பை தர மறுத்துவிட்டார்.

இருப்பினும், அப்போஸ்தலர் நடபடிகளிலும், அவருடைய மற்ற நிருபங்களிலும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது போல,  மற்றவர்கள் மீதான பவுலின் அன்பு மற்றும் மனதுருக்கம் போதக நிருபங்களில் வழிந்தோடுகிறதை பார்க்கலாம். அவர் தீமோத்தேயுவை “என் மகனே” என்றும் “எனக்கு  அருமையான குமாரன்” என்றும் குறிப்பிடுகிறார். தீத்துவை, “பொதுவான விசுவாசத்தின்படி உத்தம குமாரன்” என்றும் அழைக்கிறார். ஆனால், பவுலின் கடைசி நிரூபமான,

2 தீமோத்தேயுவின் முடிவில், மற்றவர்கள் மீதான அவரது இருதயத்தை நாம் விசேஷமாக அறிந்து கொள்ளலாம். தன்னை விட்டு பிரிந்து சென்றவர்கள்  மீதான அவரது மனவேதனையையும், அதே நேரத்தில் தீமோத்தேயு, லூக்கா, மாற்கு போன்ற மற்ற சக உடன் ஊழியர்கள் மற்றும் சிநேகிதர்கள் மீதான அவரது அன்பையும் நம்மால் காண முடிகிறது. அவர்களுடன் அவர் மறுபடியும் ஒப்புரவானதையும் தெளிவாக பார்க்கலாம். பவுலுக்கு, கிறிஸ்துவின் மீது காணப்பட்ட ஆழமான அன்பு எவ்வாறு மற்றவர்கள் மீது வழிந்தோடியது  என்பதை போதக நிருபங்கள் நமக்கு தெளிவு படுத்துகின்றன..

இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.

வில்லியம் பி. பார்க்லி
வில்லியம் பி. பார்க்லி
El Dr. William B. Barcley es el ministro principal de la Iglesia Presbiteriana Gracia Soberana en Charlotte, Carolina del Norte, profesor adjunto de Nuevo Testamento en el Seminario Teológico Reformado y autor del libro “El secreto del contentamiento”.