
மரியாள் பாவமில்லாமல் பிறந்தாளா?
25-08-2026
மரணத்தில் கிறிஸ்தவனின் ஆறுதல் எது?
01-09-2026சபை தனது மாற்றுத்திறனாளி உறுப்பினர்களை எவ்வாறு பராமரிக்க முடியும்?
என்னுடைய தற்போதைய திருச்சபையில் குழந்தைகள் அமைப்பு இயக்குநராக நான் நியமிக்கப்பட்ட சில வாரங்களுக்குள், ஒரு மூப்பரும் அவரது மனைவியும் என்னை சந்திக்கும்படி வந்தனர். “எங்கள் சபையில் உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் ஊழியம் செய்யவா, அல்லது பெரும்பாலான குழந்தைகளுக்கு மட்டும் ஊழியம் செய்ய நீங்கள் இங்கே வந்திருக்கிறீர்கள்?” என்ற முக்கியமான கேள்வியுடன் அவர்கள் ஆரம்பித்தனர். நிச்சயமாக அனைவருக்கும் ஊழியம் செய்யவே நான் வந்திருக்கிறேன் என்று நான் பதிலளித்த பிறகு, மாற்றுத்திறனாளி குழந்தைகளை கொண்டிருக்கிற எங்கள் சபையின் அங்கத்தினர்களின் ஐந்து குழந்தைகளையும் அவர்களது குடும்பங்களையும் நீங்கள் எவ்வாறு பராமரிக்க திட்டமிட்டுள்ளீர்கள் என்று என்னிடத்தில் கேட்கத் தொடங்கினர். இந்தச் சவாலான கேள்விகள் என் இதயத்தைக் குற்ற உணர்ச்சிக்குள்ளாக்கின மற்றும் எனது உலகளாவிய ஊழியத்தையும் உலுக்கின, இறுதியாக எங்கள் சபையில் ஒரு வளமான மாற்றுத்திறனாளி ஊழியத்திற்கு அதுவே அடித்தளமாக அமைந்தது.
சபையில் மாற்றுத்திறனாளிகளையும் அவர்கள் குடும்ப நபர்களையும் எவ்வாறு பராமரிப்பது என்ற கேள்விக்கு பதிலளிக்க வேண்டுமாயின், சபையின் அனைத்து உறுப்பினர்களையும் பராமரிக்க வேண்டிய பொறுப்பு நமக்குண்டு என்பதை உணர்வதே அதற்கான முதல்படி. உங்கள் சபையில் மாற்றுத்திறனாளிகள் பலர் இல்லாவிட்டாலும், மாற்றுத்திறனாளி பராமரிப்பு ஊழியம் என்பது உங்களுடைய விருப்பத்தை சார்ந்தது அல்ல. குழந்தைகள், வாலிபர்கள் போன்றோருக்கான “மிக முக்கியமான” ஊழியங்களுக்குப் பிறகு நாம் கவனம் செலுத்தும் ஒரு ஊழியம் இதுவல்ல. நடைமுறையில் ஒவ்வொரு உள்ளூர் சபையிலும் வெளிப்படையாகத் தெரியக்கூடிய அல்லது தெரியாத வகையில் பாதிக்கப்பட்ட எவராவது ஒருவர் இருக்கிறார்கள். மேலும், சபையால் அரவணைக்கப்பட வேண்டும் என்று ஏங்கும் இன்னும் பலரும் நமது திருச்சபை சமூகத்தில் இருக்கிறார்கள்.
1 கொரிந்தியர் 12-ல், அப்போஸ்தலனாகிய பவுல் திருச்சபையை அநேக உறுப்புகளை கொண்ட கிறிஸ்துவின் ஒரே சரீரமாக விவரிக்கிறார். அனைத்து உறுப்பினர்களும் எவ்வாறு வித்தியாசமானவர்களாகவும் அதே சமயம் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதை விவரித்த பிறகு அவர் இவ்வாறு எழுதுகிறார்: “பலவீனமானவைகளாகத் தோன்றுகிற சரீர அவையவங்களே மிகவும் அவசியமானவைகளாயிருக்கின்றன.. சரீரத்திலே பிரிவினை உண்டாயிராமல், அவையவங்கள் ஒன்றைகுறித்து ஒன்று கவலையுள்ளவைகளாயிருக்கும்படி இப்படிச் செய்யப்பட்டது” (1 கொரி. 12:22, 25). இந்த சத்தியங்களை மாற்றுத்திறனாளிகளுக்கு உட்படுத்தும்போது, நாம் அவர்களை நன்றாகப் பராமரிப்பது மாத்திரமல்லாமல், அவர்கள் கிறிஸ்துவின் சரீரத்திற்கு மிகவும் முக்கியமானவர்கள் என்பதை உணரவும் நாம் அழைக்கப்படுகிறோம்.
வேதத்தில் சபையானது கிறிஸ்துவின் சரீரமாக மட்டுமல்ல, தேவனுடைய குடும்பமாகவும் விவரிக்கப்பட்டுள்ளது. எனவே, மாற்றுத்திறனாளி மக்களைச் சரீரத்தின் ஒரு அங்கமாக எண்ணி நாம் பராமரிக்க அழைக்கப்படும் அதே வேளையில், ஒரு குடும்பமாக நினைத்து நாம் அதை செய்யவேண்டும். கிறிஸ்துவுக்குள் சகோதர சகோதரிகளாக, நாம் ஒரு குடும்ப பந்தத்தையும், கிறிஸ்துவுக்குள்ளாக ஒருவருக்கொருவர் மீதான நம்முடைய அன்பைப் பகிர்ந்து கொள்ளவும் வேண்டும். சபையைப் பற்றிய இந்த இரண்டு காரியங்களையும் நம் மனதில் கொண்டு, மாற்றுத்திறனாளிகளையும் அவர்களுடைய குடும்ப நபர்களையும் நாம் எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்பதற்கான ஐந்து நடைமுறை பயன்பாடுகளை நாம் சிந்திக்கலாம்:
செயல்படும்படி உட்படுத்துதல்
ஒரு குடும்ப அமைப்பை கொண்ட சபையாக, எல்லா மக்களும் அதற்குள்ளானவர்கள் என்ற விருப்பத்துடன் நாம் செயல்பட வேண்டும். பலவகையான மாற்றுத்திறனாளிகள் இருப்பார்களாயின் ஆர்வத்துடனும், செயல்படக்கூடிய சரீரத்தின் ஒரு அவயவமாயும் அவர்களை மாற்றுவது சவாலான ஒன்றே. ஆராதனை தொடங்கி சீஷத்துவம் மற்றும் மிஷனரிப் பணிகள் வரை சபையின் ஒவ்வொரு ஊழியப் பணியிலும் நாம் எவ்வாறு அனைத்து உறுப்பினர்களையும் அதற்குட்படுத்த வேண்டும் என்பதை ஆராய
வேண்டும். மாற்றுத்திறனாளிகள் உள்ளடங்குவதை மாத்திரமல்ல, அவர்களை முழுமையாகச் செயல்பட வைக்க (எபே. 2:19) வேண்டிய எல்லாவற்றையும் நாம் செய்ய வேண்டும்.
எளிதில் அணுகுதல்
மாற்றுத்திறனாளிகளை நாம் பராமரிக்க, மிகவும் வெளிப்படையான வழிகளில் ஒன்று நமது கட்டடங்களை அனைவரும் அணுகக்கூடியதாக மாற்றுவதாகும். நம்மால் ஒன்றாகக் கூடிவர முடியாமல் போனால், எல்லாரும் எப்படி ஒன்றாக ஆராதிக்க முடியும் மற்றும் சீஷராக்கப்பட முடியும்? நமது அனைத்து வசதிகளையும் எளிதில் அணுகக்கூடிய ஒன்றாக மாற்றுவது எப்பொழுதும் முதன்மையானது. ஆனால் நம்முடைய அனைத்து ஊழியம் சார்ந்த நிகழ்ச்சிகளையும் எல்லாருக்கும் எளிதில் அணுகக்கூடிய ஒன்றாக மாற்ற நாம் பாடுபட வேண்டும். செவித்திறன் மற்றும் பார்வை குறைபாடுள்ளவர்கள், அமைதியான இடங்கள் தேவைப்படுபவர்கள், மற்றும் அறிவாற்றல் குறைபாடுள்ளவர்களை நாம் எவ்வாறு பராமரிக்கிறோம்? ஞாயிற்றுக்கிழமை பள்ளி, வேதாகம வகுப்புகள் மற்றும் பிற ஊழியங்களை அணுகுவதற்கு யாருக்கேனும் ஒரு நபருடைய உதவி தேவைப்படுகிறதா? ஒரு சபை குடும்பமாக, நாம் அனைத்து அங்கத்தினர்களுடைய குடும்ப வாழ்க்கைக்கு எளிதில் அணுகும் வழியை முழுமையாக வழங்க முயல வேண்டும்.
வரங்களை பகிர்ந்து கொள்ளுதல்
தேவனுடைய குடும்பத்திள்ள அனைத்து அங்கத்தினர்களுடைய பொதுவான நன்மைக்காக ஆவிக்குரிய வரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன (1 கொரி. 12:7). மாற்றுத்திறன் கொண்ட அனைத்து கிறிஸ்தவர்களும் இதில் அடங்குவார்கள். எனவே, நாம் மாற்றுத்திறனாளிகளுக்குச் சேவை செய்து அவர்களைப் பராமரிக்க வேண்டும் என்றாலும், தேவனை மகிமைப்படுத்தவும் மற்றவர்களுக்குச் சேவை செய்யவும் அவர்களது ஈவுகளைப் பயன்படுத்தவும் நாம் அவர்களுக்குச் சீஷத்துவப் பயிற்சி அளித்து அவர்களை ஆயத்தப்படுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகளுடைய வரங்களை நாம் பயன்படுத்தாவிட்டால் சபை என்கிற குடும்பமானது முழுமையடையாது.
உண்மையான உறவுகள்
மாற்றுத்திறனாளிகளை மனிதாபிமான முறையில் நடத்துவதே தற்போதைய உலகத்தின் பொதுவான போக்காகும். கிறிஸ்தவர்கள் கூட சில நேரங்களில் மாற்றுத்திறனாளியுடைய குறைவுகளை மட்டுமே பார்க்கிறார்கள், அந்த நபரைப் பார்ப்பதில்லை. நாம் ஒருவரையொருவர் குடும்பமாக அரவணைக்கும்போது தான், உண்மையான மக்களுடன் உண்மையான உறவு கொள்ள முடியும். மாற்றுத்திறனாளிகளை “கவனித்துக்கொள்வதை” தாண்டி நாம் அவர்களைப் பற்றி உண்மையான அக்கறை கொள்ள வேண்டும். அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். அவர்களை அறிந்து கொள்ளுங்கள். அவர்களை நேசியுங்கள்.
பராமரிப்பவர்களுக்கான ஓய்வு
மாற்றுத்திறனாளிகளை பராமரிக்கக் சபையுடைய இறுதியான வழி, அவர்களை பராமரிப்பவர்கள் மீது அக்கறை கொள்வதாகும். பராமரிப்பதால் ஏற்படும் சோர்விலிருந்து வெளிவர அவர்களுடைய பெற்றோர்களுக்கு ஒரு இரவு வெளியில் செல்வது அல்லது சில மணிநேரம் ஓய்வெடுப்பது நீண்ட காலமாகப் பராமரிப்பவர்களுக்கு மிகவும் இன்றியமையாததாகும். இந்த உலகின் கவலைகளிலிருந்து பெரும்பாலான மக்கள் தங்களுக்கென ஒரு இளைப்பாறுதலை கண்டுபிடிப்பது எளிய செயலாகும். மாற்றுத்திறனாளிகளை கொண்ட குடும்பங்களுக்கு அவர்களின் சரீரம் மற்றும் ஆத்துமாக்களுக்கு வேண்டிய ஓய்வைவயும் புத்துணர்ச்சியையும் அளிக்க குடும்பமாகிய திருச்சபை அவர்களுக்கு உதவ வேண்டும்.
முடிவுரை
தனிமைப்படுத்துதல், பிரிவு மற்றும் குழப்பம் போன்றவைகளால் உலகம் பெரும்பாலும் நிறைந்திருக்கிறது, கிறிஸ்தவர்களாகிய நாமும் கூட ஒருவர் மேல் ஒருவர் அக்கறை கொள்ளாமல் இதிலிருந்து விலகிக் கொள்ள முடியும். ஆனால், சபையாக, நாம் நமது இரண்டு கடமைகளையும் செய்ய முன்வரவேண்டும்: நாம் ஒருவரோடொருவர் இணைக்கப்பட்ட கிறிஸ்துவின் சரீரமாக இருக்கிறோம், மேலும் தேவனுடைய குடும்பமாக ஒருவரையொருவர் நேசிக்கவும் பராமரிக்கவுமே நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். மாற்றுத்திறனாளிகளுக்கான ஊழிய அழைப்பு என்பது தேவனுடைய மக்கள் அனைவரையும் பராமரிப்பதற்கான ஒரு அழைப்பாகும்.
இந்தக் கட்டுரை முதலில் லிகோனியர் மினிஸ்ட்ரீஸ் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.


