
எஸ்தர் புத்தகத்திலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டிய மூன்று பிரதான காரியங்கள்
22-05-2025செப்பனியா புத்தகத்தைப் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டிய மூன்று காரியங்கள்

வில்லியம் வூட்
செப்பனியா புத்தகம் என்பது, பல்வேறு சிக்கலான தலைகீழ் மாற்றங்களும், அருமையான கவிதைநடைகளையும், ஆழமான வாக்குறுதிகளையும் மற்றும் கடுமையான எச்சரிப்புகளையும் பெற்ற குறிப்பிடத்தகுந்த நுட்பமான புத்தகமாகும். தெற்கு ராஜ்யத்தின் முடிவை பற்றி தீர்க்கதரிசனம் கூறும் செப்பனியாவின் செய்தி, இவர்கள் நாடு கடத்தப்படுவதின் மூலமாக முதலில் யூதாவின் மீதே கர்த்தர் நியாயத்தீர்ப்பார் என்ற பெரும்பகுதியை கூறுகிறது (செப்பனியா 1:4-6), மீதி உள்ள பகுதி இறுதிநாளின் அனைத்து நாடுகள் மீதும் தேவன் நியாயத்தீர்ப்பார் என்பதையும் கூறுகிறது (1:2-3:8). நியாயத்தீர்ப்பைப் பற்றி இப்புத்தகம் அதிகமாக பேசினாலும், இறுதியில் தம் மக்களை மீட்பதற்கான தேவனின் வாக்குறுதிகளில் நம்பிக்கை வைப்பதற்கென்று வாசகர்களை இந்த ஆசிரியர் வழி நடத்துகிறார் (3:9-20). மூன்று காரியங்கள், நியாயத்தீர்ப்பையும் நம்பிக்கையையும் பற்றிய செப்பனியாவின் தீர்க்கதரிசனத்தைப் பற்றி புரிந்துக் கொள்வதற்கு நமக்கு உதவுகிறது.
1.செப்பனியா, பழைய ஏற்பாட்டின் அநேக குறிப்புகளால் நிறைந்துள்ளது.
நீங்கள் செப்பனியா புத்தகத்தைப் பற்றி விளங்கிக் கொள்ள வேண்டுமென்றால், நான் உங்களுக்கு கொடுக்கின்ற சிறப்பான ஆலோசனை, முதலில் உங்கள் வேதாகமத்தை நன்றாக அறிந்துக் கொள்ளுங்கள். செப்பனியாவின் தீர்க்கதரிசன புத்தகம் இதன் செய்தியை விளங்கிக்கொள்வதற்காக, அநேக பழைய ஏற்பாட்டின் மேற்கோள்களால் நிறைந்துள்ளது. சில எடுத்துக்காட்டுகள் இதை நமக்கு காண்பிக்கிறது:
- செப்பனியா 1:2-3, ல் ஆதியாகமம் 1 ல் சொல்லப்பட்ட காரியங்களின் தலைகீழ் மாற்றங்களை காண்கிறோம், இங்கு செப்பனியா சொல்லும் படைப்பின் தலைகீழ் வரிசையை நியாயத்தீர்ப்பு மற்றும் அழிவிற்கு ஒப்பீடாக கூறப்பட்டுள்ளது. ஆதியாகமம் 1 ம் அதிகாரம் தேவனின் படைப்பின் செயல்களின் ஆரம்பங்களை கூறும் வேளையில், செப்பனியா தேவனின் நியாயத்தீர்ப்பில் இவ்வுலகம் முழுதும் அழிக்கப்படுவதை குறித்துப் பேசுகிறது. ஆதியாகமம் 1 ஐ குறிப்பிடும் அதே நேரத்தில் துன்மாரக்கரோடு சேர்த்து தடைக்கல்லாக இருக்கும் விக்கிரகங்கள் முழுவதும் அழிக்கப்படுவதைக் குறித்த காரியங்களை இதன் மீது கட்டமைக்கிறார். மனிதன் தனது பொல்லாத விக்கிரகாரதனையின் மூலமாகத்தான் தேவனின் கோபத்தை மூட்டிவிடுகிறான்.
- செப்பனியா 1:9 ல் “வாசலைத் தாண்டுகிறவர்களை” தேவன் தண்டிக்கிறார் என்பதற்கான மேற்கோள் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு செப்பனியா தாகோன் கோவிலில் பெலிஸ்திய ஆராதனையை குறிப்பிட்டு, தேவனின் ஜனங்களும் மெய்யான தேவனை இதேமுறையில்தான் விக்கிரக சடங்குகளோடு ஆராதிக்கிறார்கள் என்பதை விளக்கப்படுத்துகிறார். இவ்வித விக்கிர வழிபாட்டுமுறை தான் தேவனின் நியாயத்தீர்ப்புக்கு காரணம் என்றும், “எஜமானின் வீடு” எனப்படும் தேவனின் ஆலயம் அது தவறான ஆராதனையினால் கொடுமையினாலும் வஞ்சகத்தினாலும் நிரப்பப்பட்டிருக்கிறது என்பதையும் குறிப்பிடுகிறார்.
- செப்பனியா 2:15 ல், “நான்தான் என்னைத்தவிர வேறொருவரும் இல்லை” என்று அசீரியன் கூறுகிறான், இது ஏசாயா 40-48 ல் தேவன் ஒருவரே அவரைத் தவிர வேறொருவனும் இல்லை என்ற வசனத்திலிருந்து மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. (ஏசாயா 44:6, 45:5, 6, 14, 18, 21; 46:9). அசீரியர்களின் பாவங்கள் மிகுந்த ஆணவமும் சுயபெருமைகளும் நிறைந்து தங்களை கடவுளாக காண்பிக்கின்றன.
- செப்பனியா 2:4-15 ல் “தேசங்களுக்கு எதிரான தீர்க்கதரிசினத்தின்” ஒரு பகுதி ஆதியாகமம் 10 ல் கூறப்பட்டுள்ள அட்டவணையிலிருந்து மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
- செப்பனியா 3:9-12 ல், ஆதியாகமம் 11:1-9 ல் கூறப்பட்ட பாபேலின் மாற்றமானது இரட்சிப்பாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்னும் இதுபோன்ற அநேக மேற்கோள்கள், செப்பனியா புத்தகம் பழைய ஏற்பாட்டின் பகுதிகளால் நிறைந்துள்ளது என்பதைக் காண்பிக்கிறது.
2. கர்த்தருடைய நாள் என்பது நியாயத்தீர்ப்பு மற்றும் மீட்பின் நாள்.
செப்பனியாவின் மிக முக்கியமான கருப்பொருள் என்னவென்றால், “கர்த்தருடைய நாள்”, இவ்வார்த்தை பழைய ஏற்பாட்டில் 16 முறை வருகிறது அதில் மூன்று முறை இப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது (செப் 1:7, 14). இதில் உள்ள மற்ற சொற்றொடர்களும் கர்த்தருடைய நாள் என்ற பதத்தை குறிக்கும் வார்த்தைகளாக உள்ளன, உதாரணமாக “நாள்” (இருபது முறை) “அந்த நேரத்தில்” (நான்கு முறை) அல்லது “அப்பொழுது” (இரண்டு குறிப்புகள்) ஆக மொத்தம் 29 வெளிப்படையான மேற்கோள்கள் கர்த்தருடைய நாளைக் குறிக்கிறது. கர்த்தருடைய நாள் என்ன என்பது குறித்து இறையியல்வாதிகள் நீண்ட காலமாக விவாதித்து வருகின்றனர், இந்த நாள் யூதமக்களின் பண்டிகை நாளாகவோ, பரிசுத்த யுத்தமாகவே, கர்த்தர் வெளிப்படும் நாளாகவோ, உடன்படிக்கை அல்லது அதில் சம்பந்தப்பட்ட நாளாக இருக்கும் என எண்ணிவருகின்றனர்.
கர்த்தருடைய நாள் பற்றிய இந்த விவாதத்தில் செப்பனியா மிக முக்கிய பங்காற்றுகிறது. இந்த நாளைப்பற்றியதான இறையியலார்களின் அனைத்து கொள்கைகளும் இப்புத்தகத்தில் அமைந்திருந்தாலும், கர்த்தரின் வருகைக் குறித்ததான அடிப்படை காரியங்களை செப்பனியா இங்கு சித்தரிக்கிறது. இங்கு கர்த்தருடைய நாள் என்பது, பரலோகத்தின் தேவன் தமது பரிசுத்த ஆலயத்திலிருந்து சேனைகளின் அதிபதியாக, தெய்வீக போர்வீரராக எழும்பி உடன்படிக்கையின் சாபங்களையும் ஆசீர்வாதங்களையும் செலுத்துவதற்கும், தெய்வீக மகிமையை வெளிப்படுத்துவதற்கும் வருகிறார் (1:15) என்பதை யூதர்களின் ஆராதனை முறைகளோடு சித்திரிக்கிறது (செப்பனியா 1:7, 9, 14, 16), (1:13, 18, 3:19-20). மிக அடிப்படையாக கர்த்தருடைய நாள் என்பது அவரின் வருகையின் நாள். இந்த நாள் தேவனுடைய மலைக்கு கொண்டுவரப்படுகின்ற விசுவாசிகளுக்கு நம்பிக்கையின் நாள் (3:11) அங்கு அவர்கள் நித்திய பாதுகாப்போடு வாழ்கிறார்கள் (3:9-20), ஆனால் துன்மார்க்கருக்கோ அந்த நாள் கோபாக்கினையின் கொடூர நாள் (1:2-18, 2:4-3:8).
3. தாழ்மை மற்றும் பெருமை ஆகியவைகள் இவற்றின் கருப்போருள்கள்.
இறுதியாக, செப்பனியாவில் உள்ள கர்த்தருடைய நாள் என்ற மையக் கருப்பொருள் பெருமையுள்ளவர்களுக்கும் தாழ்மையுள்ளவர்களுக்குமான காரியங்களை தலைகீழாக மாற்றுதல் என்ற தேவனது இறையியல் சிந்தனையோடு இணைக்கப்பட்டுள்ளது. பெருமை நிறைந்த சுய அகந்தைகள்தான் கர்த்தருடைய நாளின் நியாயத்தீர்ப்புக்கு முக்கிய காரணம். தேவனுடைய மக்களுக்கு எதிராக மோவாபியரின் பெருமைமிக்க நிபந்தனைகளுக்கு பதிலளிக்கும் விதமாக அவர்களுக்கு எதிராக சாபங்களை உரைத்தப் பிறகு செப்பனியா இவ்வாறு கூறுகிறார்:
- “அவர்கள் சேனைகளையுடைய கர்த்தரின் ஜனத்துக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டி அவர்களை நிந்தித்தபடியினால், இது அவர்கள் அகங்காரத்துக்குப் பதிலாக அவர்களுக்குக் கிடைக்கும். “
செப்பனியா 2:10
தேவனுடைய பரிசுத்த மலையிலிருந்து பெருமைமிக்கவர்கள் அகற்றப்படுவார்கள் (செப் 3:11). பெருமையுள்ளவர்கள் தங்களை உயர்த்திக் கொள்வது மட்டுமல்லாமல், அவர்களின் பெருமைக்கு இணையான நிந்தனைகளும் மற்றும் பெருமை நிறைந்த சுய கொண்டாட்டங்களும் கொண்டுள்ளனர். அசீரியா நாடு “களிகூர்ந்த நகரம்” என்றழைக்கப்படுகிறது, இது ஏசாயா 40-48 ல் கூறப்பட்ட தேவன் ஒருவரே அவரைத் தவிர வேறொருவரும் இல்லை என்ற வாரத்தைகளிலிருந்து மேற்கோள் காட்டப்பட்டுள்ளது (செப் 2:15). பெருமைமிக்க அகம்பாவம் தூஷணமிக்க தற்புகழ்ச்சியில் வெளிப்படுகிறது. ஆனால் கர்த்தருடைய நாளில், தங்களை உயர்த்தி, தங்களைப் பற்றி பெருமைப்படுபவர்கள் தாழ்த்தப்படுவார்கள்.
இருப்பினும், செப்பனியாவில் உள்ள மீட்பானது தேவனில் களிகூறும் தாழ்மையுள்ளவர்களின் உயர்த்துதலாகும். (செப் 3:9) ல் நியாயத்தீர்ப்பிலிருந்து இரட்சிப்பின் மாற்றமானது, அனைத்து தேசங்களிலிருந்து கூடும் “சிறுமையும் எளிமையுமான” (3:12) கூட்டங்களுக்குள்ளாக உள்ளது. அவர்கள் தங்களை தாங்களே உயர்த்தாமல், “தேவனுடைய நாமத்தை கூப்பிடுவார்கள்” (3:9). தாழ்மையுள்ளவர்கள் தங்களில் களிகூறாமல் தேவனில் களிகூர்ந்து அவரையே ஆராதிப்பார்கள் (3:14).
மேலும் தாழ்மையுள்ளவர்களை நேசித்து உயர்த்தும் இவ்வற்புதமான நேரத்தில் தேவனும் அவர்களைக் குறித்து களிகூர்ந்திருக்கிறார் (3:17).
ஒரு காலத்தில் இம்மக்கள் “தள்ளப்பட்டவர்கள்” “நொண்டியானவர்கள்” (3:19) என்று விவரிக்கப்பட்டு மற்ற நாடுகள் தங்கள் அகந்தையினால் (2:8) மக்களை அவமானப்படுத்தினர் (3:19). ஆனால் தேவனின் வாக்குத்தத்தம் என்னவென்றால், அவர் தாழ்மையுள்ளவனை உயர்த்துவார், அவர்களை “பூமியின் அனைத்து தேசங்களிலும் கீர்த்தியும் புகழ்ச்சியும் “ உண்டாக்குவார் (3:19,20). செப்பனியா 2:3 ல் மிக முக்கிய அறிவுரை காணப்படுகிறது. “நீதியைத் தேடுங்கள், மனத்தாழ்மையை தேடுங்கள்” என்று தேவன் அழைக்கிறார். இது “தேவனைத் தேடுங்கள்” என்ற அழைப்பிற்கு இணையானதாகும்.
சுருக்கமாக, செப்பனியாவின் இறையியல் செய்தியான கர்த்தருடைய நாள் என்பது, பழைய ஏற்பாட்டு புத்தகங்களுடன் உள்ள அநேக தொடர்புகள் மூலம் சித்தரிக்கப்பட்டுள்ளது , “தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்” ( மத். 23:12 ) என்று நாம் கூறலாம்.
இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.