A Catechism on the Heart
இருதயத்திற்கான வினா விடை போதனைகள் 
11-12-2025
What Is Spiritual Warfare?
ஆவிக்குரிய யுத்தம் என்றால் என்ன?
18-12-2025
A Catechism on the Heart
இருதயத்திற்கான வினா விடை போதனைகள் 
11-12-2025
What Is Spiritual Warfare?
ஆவிக்குரிய யுத்தம் என்றால் என்ன?
18-12-2025

அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது

Love That Is Patient and Kind

1 கொரிந்தியர் 13 ம் அதிகாரம் முழு வேதத்திலும் பிரபலமான அதிகாரங்களில் ஒன்றாகும், இதில் அப்போஸ்தலனாகிய பவுல் தெய்வீக அன்பைக் குறித்த மேன்மையான விளக்கத்தை நமக்கு அளிக்கிறார். அன்பின் முக்கியத்துவத்தை காண்பிப்பதில் ஆரம்பிக்கும் பவுல், நாம் எல்லாவித வரங்களையும், திறன்களையும், சாதனைகளையும் கொண்டிருந்தாலும் அன்பு இல்லாவிட்டால் நாம் ஒன்றுமேயில்லை என்று கூறுகின்றார் (வச 1-3). மேலும், 4 ம் வசனத்தில் தெய்வீக அன்பு எவ்வாறு இருக்கும் என்பதை விளக்குகிறார், “அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது.” நவீன மொழிபெயர்ப்பில் “அன்பு நீடிய பொறுமையும் தயவுமுள்ளது.” என உள்ளது. பொறுமை மற்றும் தயவு ஆகிய இவை இரண்டையும் பார்ப்பதில் எனக்கு ஆர்வம் ஏற்படுகிறது. அன்பைப் பற்றிய விளக்கத்தில் அப்போஸ்தலனாகிய பவுல் இந்த பண்புகளை ஏன் முதலில் வைத்தார்? ஏன் அவற்றை இணைக்கிறார்?

அன்பு நீடிய சாந்தமுள்ளது, “நீடித்த பொறுமையுள்ளது” என்று பவுல் கூறுகிறார். நான் இந்த வசனத்தைப் பற்றிய நவீன மொழிபெயர்ப்பை விரும்புவதற்கு காரணம், பிறரை நேசிப்பது என்பது கடினமான ஒன்றாக இருக்கும் என்ற காரியத்தை இது கூறுகிறது. மக்களை நேசிப்பது என்பது, அவர்கள் நம்மை முதல்முறையாக புண்படுத்தும் போது நாம் அவர்களை தள்ளிவிடுவதில்லை. நமது உறவுகளில் நாம் ஒரு சிலரைத் தவிர மற்றவர்களிடம் அதிக பொறுமையாக உள்ளோம். ஒருவேளை எனது நீண்ட கால நண்பன் ஒருவன் எனக்கு எரிச்சலூட்டும் அல்லது கோபப்படுத்துகிற காரியத்தை செய்தாரென்றால், நான் வழக்கமாக, “ஓ, அது அவருடைய குணம், அதுதான் அவரின் தன்மை, நாமனைவரும் மனிதர்கள்தானே, நம்மில் யாரும் சரியானவர்கள் அல்ல.” என்று கூறுவேன். ஆனால் ஒருவேளை நான் இன்னொரு நபரை சந்திப்பேனென்றால், அந்த நபர் முன்பு எனது நெருங்கிய நண்பர் செய்த அதே காரியத்தை எனக்கு செய்தாரென்றால், அவருடன் நான் எதையும் பேசாமல் விட்டு விலக விரும்புவேன். மற்ற அந்நிய நபர்களோடு நாம் பொறுத்துக்கொள்ள முடியாத காரியங்களை நமது நண்பர்களிடம் பொறுத்துக்கொள்கிறோம்.

நீடிய பொறுமையுள்ள அன்பிற்கு மதிப்பெண் பலகை இருக்காது. முதல் முறை நீங்கள் என்னை எதிர்க்கும் போது “முதல் கோட்டை அழியுங்கள்” என்று நான் கூறலாம் மற்றும் நீங்கள் வெளியேறும் முன் ஒருவேளை இரண்டு கோடுகளையும் உங்களுக்கு நான் கொடுக்கலாம். ஆனால் எனது அன்பு நீடிய சாந்தமுள்ளது என்றால், நீங்கள் எழுபத்து ஏழு கோடுகளைக் கூட வைத்திருக்கலாம், நான் அங்கேயே உங்களோடு கூட தான் இருப்பேன்.

ஏன் கிறிஸ்தவ அன்பு நீடிய பொறுமையுள்ளது? காரணம், கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவை மாதிரியாக பின்பற்றுகிறார்கள், கிறிஸ்து பிதாவை மாதிரியாக பின் தொடர்கிறார், மற்றும் நீடிய பொறுமை என்பது தேவனுடைய பிரதான குணாதிசயங்களில் ஒன்றாகும். அடிக்கடி வேதம், தேவன் கோபம் கொள்ள தாமதிக்கிறார், வணங்கா கழுத்துள்ள தம்முடைய பிள்ளைகள் மீது நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார் என்று கூறுகிறது. உதாரணமாக, தேவன் இவ்வாறு தன்னை வெளிப்படுத்திகிறார்: “கர்த்தர் அவனுக்கு முன்பாகக் கடந்துபோகிறபோது, அவர்: கர்த்தர், கர்த்தர். இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும், சத்தியமுமுள்ள தேவன்.” (யாத்திராகமம் 34:6). அதேபோல், பவுலும், “தேவதயவு நீ குணப்படும்படி உன்னை ஏவுகிறதென்று அறியாமல், அவருடைய தயவு பொறுமை நீடியசாந்தம் இவைகளின் ஐசுவரியத்தை அசட்டைபண்ணுகிறாயோ?” (ரோமர் 2:4) என்கிறார்.

நீங்கள் ஒரு கிறிஸ்தவராக இருப்பீர்கள் என்றால், நீங்கள் இரட்சிக்கப்படுவதற்கு முன்பாக உங்களது அவிசுவாசத்தை தேவன் எந்தளவுக்கு பொறுத்திருப்பார்? நீங்கள் பாவத்தில் நிலைத்திருப்பதை எந்தளவுக்கு தேவன் பொறுத்திருப்பார்? தேவனின் நீடிய பொறுமை இல்லை என்றால் நாம் அழிந்து போயிருப்போம். ஒருவேளை தேவன் நம்மை, நாம் எவ்வாறு பிறரிடம் பொறுமை இல்லாமல் இருக்கிறோமோ அதே போல் அவர் நம்மிடம் இருந்திருப்பாரென்றால், இந்த நேரம் நாம் நரகத்தில் வேதனைப்பட்டுக் கொண்டிருப்போம். அவர் நமது கீழ்ப்படியாமையையும், தேவதூஷணத்தையும், அலட்சியத்தையும், அவிசுவாசத்தையும், பாவத்தையும் சகித்துக்கொண்டிருக்கிறார், இன்னும் நம்மை நேசிக்கிறார். இவர்தான் தேவன். இவ்வாறுதான் தமது அன்பை வெளிப்படுத்துகிறார். அவர் தமது அன்பை பொறுமையின் மூலமாக அதாவது நீடித்த சகிப்பின் மூலமாக காண்பிக்கிறார்.

கடவுளின் நீடிய பொறுமை இல்லையென்றால் நாம் அழிந்து போயிருப்போம்.

நாம் பொறுமையாக இருப்பதற்கு மட்டுமல்ல நீடித்த சாந்தமுள்ளவர்களாக இருப்பதற்கும் அழைக்கப்பட்டு இருக்கிறோம். அதாவது பிறரின் பாவங்கள் குற்றங்கள் ஆகியவைகள் நமக்கு வலியையும் வேதனையையும் தராதவரைக்கும் நாம் பொறுமையாக இருக்க வேண்டும் என்பதல்ல. நீடித்த பொறுமை என்பது நாம் வேதனையையும் வலியையும் அனுபவிக்கும் நேரத்திலும் பொறுமையாக இருப்பது. “எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள். அன்பு திரளான பாவங்களை மூடும்.”

(1 பேதுரு 4:8) என்பதே இதன் அர்த்தம். இவ்வாறு நாம் செய்கையில் நாம் வீடியோ பொறுமையுள்ள தேவனின் அன்பை பிரதிபலிக்கிறோம்.

பிறகு ஏன் பவுல் நீடிய சாந்தத்தையும் தயவையும் இணைத்துப் பேசுகிறார்? நாம் விரோதத்தோடு இருந்து பதிலுக்கு பழிவாங்க சதி செய்யும் வேளையில் நீண்ட காலமாக நாம் காயத்தையோ அல்லது விரோதங்களையோ அனுபவிக்க நேரிடும். ஆனால் வேதம் கூறும் நீடிய பொறுமை இது அல்ல. நீடிய பொறுமை தயவை உள்ளடக்கியது, நமது துன்பத்திற்கு காரணமானவற்றின் மீது நாம் தயவுள்ளவர்களாக இருக்க வேண்டும். தயவுள்ள மக்கள் கொடூரமானவர்களோ அல்லது மோசமானவர்களோ அல்ல. அவர்கள் தாராள இருதயங்களைக் கொண்டவர்கள். அவர்கள் பிறரிடம் உணர்வுபூர்வமாகவும், மென்மையாகவும் இருப்பவர்கள். 

எனது தந்தையும் இப்படிப்பட்ட ஒரு நபர்தான் என்பதை நான் நம்புகிறேன். உண்மையில் அவர் ஓர் தயவுள்ளவர். தேவனுடைய தயவை என்னிடம் அவர் காண்பித்திருக்கிறார். நான் பள்ளியிலிருந்து வீட்டிற்கு வரும்போது நான் செய்த ஏதோ ஒன்றிற்காக இப்பொழுது நான் பிரச்சனையில் சிக்கியுள்ள ஏன் என்பதை கண்டபோது எனக்கு வெறுப்பாய் இருந்தது. “உன்னோடு கூட உனது அப்பா தனியாக பேச விரும்புகிறார்” என எனது தாயார் என்னிடம் கூறுவார்கள். நான் எனது அப்பாவின் அறைக்குள் சென்று கதவை அடைத்தப்பிறகு அவர் கூறுவார், “நல்லது! மகனே, நாம் இப்போது பேச வேண்டியிருக்கிறது.” என்று. அவர் தனது சத்தத்தை உயர்த்தாமல், கோபத்தை வெளிப்படுத்தாமல் எனக்கு புத்தி சொல்லி எப்படியோ என்னை வேறு ஒரு இடத்துக்கு கூட்டிச் செல்வார் பிறகு என்னை ஒருமுகப்படுத்தி தயவோடு என்னிடம் இருப்பார். அதற்கு பிறகு அவரது அலுவலகத்தை விட்டு வெளியில் வந்து சந்தோஷத்தோடு சிறகடித்து காற்றில் பறப்பேன். நான் மகிழ்ச்சியாக உணர்ந்தேன், ஆனாலும் அடுத்த முறை இதை விட நலமானதை நான் செய்யவேண்டும் என்பதை அறிந்தேன். அவர் எனக்கு முன்மாதிரியாக இருந்து என்னை ஊக்கப்படுத்தினார், அவரது நடக்கை மிகவும் தயவுமிக்கதாயிருந்தது.

உண்மையிலேயே தயவு உள்ளம் கொண்ட ஒருவர் அரிதானவர் என்பதை நான் அறிகிறேன். ஆனால் அன்பின் வெளிப்பாடாக, தயவை நீடிய பொறுமையுடன் இணைக்க வேண்டும். எளிமையாகச் சொன்னால், அன்பு பொறுமையற்றதோ அல்லது இரக்கமற்றதோ அல்ல. இது கடவுளின் அன்பின் ஒரு பிரதிபலிப்பு, இதே அன்பைத் தான் கடவுளின் பிள்ளைகளிடம் பரிசுத்த ஆவியானவர் வளர்க்கிறார்.

இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.

ஆர். சி. ஸ்ப்ரௌல்
ஆர். சி. ஸ்ப்ரௌல்
Dr. ஆர். சி. ஸ்ப்ரௌல் (1939-2017) லிகனியர் ஊழியத்தின் ஸ்தாபகரும், அமெரிக்காவில் உள்ள சேன்போர்டு செய்ன்ட் ஆலயத்தில் முதல் போதகரும், Reformation வேதாகம கல்லூரியின் தலைவரும் ஆவார். நூற்றுக்கும் மேற்ப்பட்ட புத்தகங்களை எழுதியுள்ள இவர் தேவனின் பரிசுத்த தன்மை (The Holiness of God) என்ற சிறப்பு பெற்ற புத்தகத்தின் ஆசிரியருமாவார்.