
திருமணத்தை பற்றி அறிந்துக் கொள்ள வேண்டிய ஐந்து காரியங்கள்
20-02-2025
நரகத்தைப் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டிய ஐந்து காரியங்கள்
27-02-2025உடன்படிக்கை இறையியல் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 5 விஷயங்கள்

சீர்திருத்த சபைகளில் சில தலைப்புகள் அடிக்கடி விவாதிக்கப்பட்டாலும் அடிப்படையான சத்தியங்களை எளிதில் மறந்துவிட வாய்ப்புண்டு. அத்தகைய ஒரு தலைப்பே உடன்படிக்கை இறையியாலாகும். உடன்படிக்கை இறையியல் பற்றி கிறிஸ்தவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஐந்து விஷயங்களைப் இங்கே சிந்திக்கலாம்.
1. உடன்படிக்கை இறையியல் என்பது தேவனுடனான நமது உறவை குறிக்கின்றது.
உடன்படிக்கை என்பது ஒழுக்க ரீதியிலான ஒரு உறவை குறிக்கின்ற சொல்லாகும். இந்த வகையான உறவை திருமணம் சிறப்பாக எடுத்துக்காட்டுகிறது (மல். 2:14). திருமணம் என்பது இரண்டு நபர்களுக்கு இடையேயான மிக நெருக்கமான உறவை வெளிப்படுத்துகிறது . இந்த விசேஷித்த, தனிப்பட்ட மற்றும் அன்பான கூட்டமைப்பு சட்டபூர்வமான வகையில் ஏற்படுத்தப்படுகிறது. உடன்படிக்கையும் இதைப்போலவே செயல்படுகிறது.
தேவன் நம்முடன் எவ்வாறு உறவு கொள்கிறார் என்பதை நன்கு புரிந்துகொள்ள உடன்படிக்கை இறையியல் நமக்கு மிக அவசியமாகும். தேவனுடனான நமது உறவு எப்படிபட்டது என்பதை குறித்து நாம் தெளிவாக இல்லாவிட்டால், நாம் கர்த்தருடன் இணைந்து நடப்பது மிகவும் கடினமாக இருக்கும். தேவனுடைய சிந்தையில் நாம் எப்படி இருக்கிறோம், அவர் நம்மை ஏற்றுக்கொள்கிறாரா, அல்லது அவர் நம்மை எப்படி ஏற்றுக்கொள்கிறார், நாம் அவரை கிட்டி சேர்வதற்கான சிறந்த வழிமுறைகள் எவை? போன்ற அடிப்படையான காரியங்களை பற்றி நாம் சிந்திக்க தவறுவோமானால் , அவருடன் நாம் கொண்டுள்ள உறவை குறித்து நிச்சயமற்ற நிலைபாட்டையே பல வேலைகளில் நாம் கொண்டிருப்போம்.
உடன்படிக்கை இறையியலானது, தேவனுடனான நமது உறவு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை தேவனே நமக்கு எப்படி வெளிப்படுத்தி இருக்கிறார் என்கிற சத்தியத்தை உறுதிப்படுத்துகிறது. பரிசுத்த வேதாகமாம் தேவனால் எழுதப்பட்டு, நாம் அவரோடு எவ்வாறு சரியான உறவைப் கொண்டிருக்கவேண்டும் என்பதை தெளிவாக எடுத்துரைக்கிறது. உடன்படிக்கை என்பது ஒரு ஒழுக்கமான உறவாக இருப்பதால், அந்த நிலையான பிணைப்பில் அவர் தம்மை இணைத்து கொண்ட வண்ணமாகவே, அவருடனான நமது உறவைப் பற்றிய நிச்சயத்தையும் அவரே நமக்குத் தருகிறவராயும் இருக்கிறார்.
2. உடன்படிக்கை இறையியலானது கிரியைக்கும், கிருபைக்கும் இடையிலான வித்தியாசத்தை புரிந்துகொள்ள நமக்கு உதவுகிறது.
எபேசியர் 2:8–9 வேதப்பகுதியானது சீர்திருத்த புராட்டஸ்டன்ட்டுகள் இரட்சிப்பை எவ்வாறு புரிந்துகொண்டார்கள் என்பதற்கான ஒரு முக்கியமான அம்சத்தைப் விளக்குகின்றது: “கிருபையினாலே விசுவாசத்தை கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள். இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு, ஒருவரும் பெருமை பாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல.” கிருபையினால் மட்டுமே கிடைக்கும் இந்த இலவச இரட்சிப்பு, இதே அதிகாரத்தில் வசனம் 10-ல் உள்ள கருத்துடன் எவ்வாறு தொடர்புடையது என்பதை விளக்குவது நமக்கு கடினமாக காணப்படலாம்: “ஏனெனில் நற்கிரியைகளை செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப் பட்டு,தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம் பண்ணியிருக்கிறார்” (எபே. 2:10). கிருபை நமக்குக் கொண்டுவரும் சுதந்திரத்தையும், அதோடு அதற்கு நாம் எவ்வாறு பொறுப்புள்ளவர்களாக வாழ வேண்டும் என்கின்ற இந்த இரண்டு முக்கிய சத்தியங்களையும் நாம் எவ்வாறு ஒருசேர புரிந்து கொள்கிறோம்?
ஆதிகால சீர்திருத்த, உடன்படிக்கை இறையியலானது, கிரியையின் உடன்படிக்கைக்கும், கிருபையின் உடன்படிக்கைக்கும் இடையில் காணப்படும் வித்தியாசத்தை தெளிவாக வேறுபடுத்திக் காட்டுகிறது. வீழ்ச்சிக்கு முன்பாக தேவன் ஆதாமுடன் கிரியையின் அடிப்படையிலான உடன்படிக்கையைச் செய்திருந்தார், மேலும் அது நிபந்தனையுடன் கூடிய பூரணமான கீழ்ப்படிதலை எதிர்பார்க்கிறது. இரண்டாவது ஆதாமாகிய இயேசு கிறிஸ்துவால் உண்டான கிருபையின் உடன்படிக்கையானது, கிறிஸ்துவின் மூலமாய் செய்யப்பட்ட பரிகாரபலியை விசுவாசிப்பதன் மூலமாகவே தேவன் நம்மை அங்கீகரிக்கிறார் என்று சொல்லுகிறது . இந்த இரண்டு வகையான கிரியை மற்றும் கிருபையின் அடிப்படையிலான உடன்படிக்கையானது, நாம் எவ்வாறு தேவனோடு இணைவது மற்றும் இரட்சிப்படைவது என்பதுபற்றி இரண்டு வெவ்வேறான மற்றும் எதிர்மறையான செயல்பாட்டை கொண்டிருப்பதை நம்மால் பார்க்க முடியும்.
ஆகவே உடன்படிக்கை இறையியலானது, கிருபைக்கும், கிரியைக்கும் இடையிலான ஒப்புமையை வெளிப்படுத்துகிறது, ஏனென்றால் விசுவாசிகளுடைய வாழ்க்கையானது நற்கிரியைகளுக்கென்று சிருஷ்டிக்கப் பட்ட போதிலும், தேவனுடனான அவர்களுடைய உறவானது கிரியைகளின் அடிப்படையில் ஒருபோதும் நிலைநிற்பதில்லை. இரட்சிக்கப்படுவதற்கு விசுவாசிகளோடு தேவன் கொண்டுள்ள உடன்படிக்கையானது கிரியையின் நிபந்தனையை அடிப்படையாக கொண்டிராததால், நாம் தேவனுடன் சரியாக இருக்கிறோம் என்பதற்கு நம்முடைய கிரியைகள் ஒருபோதும் ஆதாரமாக இருப்பதில்லை.
3. உடன்படிக்கை இறையியலானது முழு வேதாகமத்திலும் கிறிஸ்துவின் மேன்மையை பார்க்க உதவுகிறது.
கொலோசெயர் 2:17 ல் இஸ்ரவேல் ஜனங்களுடைய மத வாழ்க்கையானது, வருங்காரியங்களின் நிழலாகவும், அவைகளின் பொருள் கிறிஸ்துவை பற்றினது என்றும் அப்.பவுல் மேற்கோள் காட்டுகிறார். ஆகவே பழைய ஏற்பாட்டு காலத்தில் தேவனுடைய ஜனங்களுக்கு கொடுக்கப்பட்ட பல சடங்குகளானது, ஆதியாகமம் 3:15 ல் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட, வரப்போகிற மேசியாவின் மேல் அவர்கள் வைக்க வேண்டிய விசுவாசத்திற்கு அடையாளமாகவே கொடுக்கப்பட்டது. மனிதனுடைய வீழ்ச்சிக்குப் பிறகு, கிறிஸ்துவின் மீதான விசுவாசம் மட்டுமே இரட்சிப்பிற்கான ஒரே வழியாக இருப்பதால், வேதத்தின் மூலமாக காணப்படும் தேவனுடைய எல்லா வெளிப்பாடுகளும் கிறிஸ்துவை மையமாக கொண்டே செயல்படுகிறது என்பதை உடன்படிக்கை இறையியலானது நமக்கு நினைப்பூட்டுகிறது.
4. திருச்சபையின் முக்கியத்துவத்தைக் காண உடன்படிக்கை இறையியல் நமக்கு உதவுகிறது.
மத்தேயு 28:19-20-ல் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து திருச்சபைக்கு கொடுத்த மிகப் பெரிய கட்டளை என்னவென்றால், “பிதா,குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்” என்பதே. இப்படிப்பட்ட வெளிப்பிரகாரமான திருநியமங்களை கைக்கொண்டு, தேவனுடைய வார்த்தையை உபதேசிப்பதே, தேவனுடைய பிள்ளைகளாக அவரின் ஊழியத்தை விஸ்தரிப்பதற்கு நாம் செய்ய வேண்டியவைகளாகும்.
உடன்படிக்கை இறையியலானது, வேத வேதவாக்கியங்களின் முழு கருப்பொருளும் கிறிஸ்துவே என்பதை மட்டும் நமக்கு நினைப்பூட்டாமல், அவருடைய ஆவிக்குரிய பணியை செய்வதற்கும், அவருடைய திருச்சபைக்கு அவர் அருளின உன்னதமான கிருபையை செயல்படுத்துவதற்கும், அவருடைய ஜனங்களிடத்தில் அவர் வாசம் செய்கிறவராய் இருக்கிறார் என்பதையும் நமக்கு வெளிப்படுத்துகிறது. வெஸ்ட்மினிஸ்டர் கேள்வி பதில் 88 ல், வேத வார்த்தை, திருநியமங்கள் மற்றும் ஜெபம் போன்றவைகளே திருச்சபையின் வாயிலான கிருபையின் வெளிப்பாடுகள் என்பதை நமக்கு நினைப்பூட்டுகிறது. இப்படிப்பட்ட வெளிப்பிரகாரமான சாட்சிகள், விசுவாசிகளின் உடன்படிக்கையின் கருப்பொருளாக கிறிஸ்து இருக்கிறார் என்பதை காண்பிக்கிறது. இதை ‘உடன்படிக்கையின் வெளிப்பிரகாரமான செயல்பாடு’ என்று சுருக்கமாக அழைக்கலாம். கிறிஸ்தவ வாழ்க்கையின் முக்கிய அங்கமாக திருச்சபையே விளங்குகிறது, ஏனென்றால் அங்கே நாம் கிறிஸ்துவை சந்திப்பதற்கு வெளிப்பிரகாரமாக ஆயத்தப்படுகிறோம்.
5. நாம் பரிசுத்தத்தில் வளரும்போது ஆழமான நிச்சயத்தை பெற உடன்படிக்கை இறையியல் நமக்கு உதவுகிறது.
எபேசியர் 1:13-14 ல் கிறிஸ்துவுக்குள்ளான விசுவாசிகளில் வாசமாயிருக்கும் ஆவியானவரே அவர்கள் நித்திய ஜீவனை அடைவதற்கான அத்தாட்சியை கொடுக்கிரவராய் இருக்கிறார் என்பதை பின்வரும் வசனங்களில் வெளிப்படுத்துவதை பார்க்கலாம்.
“நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள். அவருக்குச் சொந்தமானவர்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாக மீட்கப்படுவார்கள் என்பதற்கு ஆவியானவர் நம்முடைய சுதந்தரத்தின் அச்சாரமாயிருக்கிறார்”. என்று கூறுகிறது. கிறிஸ்துவோடு நாம் இணைந்து நடக்கும் போது இப்படிபட்ட தெய்வீக தேற்றரவாளனே பரிசுத்தத்தில் நாம் வளர்வதற்கு நம்மை உந்தி தள்ளுகிறார். உடன்படிக்கை இறையியலானது, ஆவியானவரால் பலப்படுத்தப்பட்ட இந்த பரிசுத்த வாழ்க்கையானது கிறிஸ்து நமக்கு சம்பாதித்த பரிசு என்பதையும் நமக்கு நினைப்பூட்டுகிறது. கிறிஸ்து நமக்காக பரிபூரணமாக கீழ்படிந்து எல்லா நிபந்தனையையும் நிறைவேற்றி முடித்திருக்கிறார். விசுவாசத்தோடு நாம் அவரை பின்தொடரும்படியாய் அவர் தமது ஆவியானவரை கொண்டு நம்மை தொடர்ந்து பயிற்றுவிக்கிறவராயும் இருக்கிறார். நாம் நித்தியத்தில் கிறிஸ்துவோடு இருப்போம் மற்றும் நாம் அவருக்கு சொந்தமானவர்கள் என்பதையும் அவர் நமக்கு கொடுத்த பரிசாகிய இந்த ஆவியின் முத்திரையே நமக்கு அத்தாட்சியாய் இருக்கிறது.
இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.