
யோவேல் புத்தகத்திலிருந்து அறிய வேண்டிய மூன்று பிரதான காரியங்கள்
26-03-2026
மனித இயல்பு அடிப்படையிலேயே நல்லதா அல்லது முழுவதும் பாவத்தில் உள்ளதா?
02-04-2026எபிரெயர் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டிய மூன்று காரியங்கள்
எபிரெயர் நிருபத்தின் அடிப்படை அம்சங்களைப் புரிந்துகொள்வதற்கான ஒரு அணுகுமுறை, இதில் உள்ள உபதேசங்களைப் பற்றிய மூன்று முக்கியக் அம்சங்களுக்கு அது அளித்துள்ள இன்றியமையாத பங்களிப்புகளை ஆராய்வதாகும்.
1. உடன்படிக்கை இறையியலை புரிந்துக் கொள்ள எபிரெயர் மிக முக்கியமானது.
வேதத்தின் உடன்படிக்கை இறையியலைப் புரிந்துக் கொள்வதற்கு எபிரெயர் நிருபமானது புதிய ஏற்பாட்டின் மிக முக்கிய புத்தகம் என்பதை நான் தயக்கமின்றி கூறுவேன். உடன்படிக்கைப் பற்றிய ஒருவரின் புரிதலானது அது எத்தகையதாக இருந்தாலும் சரி, அவர் எபிரெயர் புத்தகத்தை எவ்வாறு விளக்குகிறார் என்பதில் வெளிப்படும். இந்நிருபம் பழைய உடன்படிக்கையின் நோக்கத்தையும் புதிய உடன்படிக்கையோடு உள்ள தொடர்பையும் ஆராய்கிறது. இது, பழைய ஏற்பாட்டினை எவ்வாறு நாம் வாசிக்கவேண்டும் என்பதற்கான ஓர் விளக்க கண்ணாடி ஆகும்.
அநேக நேரங்களில் வாசகர்கள், எபிரெயர் பழைய உடன்படிக்கையை இழிவுப்படுத்துகிறது என்று நினைக்கக்கூடும். ஆனால் உண்மை என்னவென்றால், இதற்கு முற்றிலும் மாறானது. பழைய உடன்படிக்கை நிலையற்றதாக இருந்தாலும், அது அதன் முழு மகிமையுடன் பார்க்கப்படும்போது, புதிய உடன்படிக்கையின் மகிமை மிகவும் பிரகாசமாக ஜொலிக்கிறது. இந்த வேறுபாடு பலவற்றை “ஆதலால்/அப்படியென்றால்” கூற்றுகளில் காணலாம் ( எபி. 2:1–4; 9:13–14; 12:25 ). புதிய உடன்படிக்கை பழையதை ஒழிப்பதில்லை, அது அதை முழுமையாக்குகிறது என்பதை எபிரேயர் புத்தகம் நிரூபிக்கிறது. இதுவே நாம் முழு வேதாகமத்தையும் வாசிக்கும் விதத்தை வடிவமைக்கிறது. வேதாகமமே வேதாகமத்தை விளக்குகிறது என்பதை எபிரேயர் புத்தகம் நமக்குக் காட்டுகிறது. நாம் பழையதையும் புதியதையும் ஒன்றுக்கொன்று எதிராக நிறுத்தக்கூடாது, மாறாக அவற்றை அவற்றின் சரியான உறவில் நிழல் மற்றும் பொருள், வாக்குத்தத்தம் மற்றும் நிறைவேற்றம் ஆகியவற்றைக் காண வேண்டும்.
புதிய உடன்படிக்கையின் காலத்தில் வாழ்வதன் மகிமையான சிலாக்கியத்தையும் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டுவதில் நூலாசிரியர் மிகுந்த வைராக்கியம் காட்டுகிறார் (எபி. 1:2-3 காண்க ) . நாம் மிகவும் மேன்மையான (எபி 8:6), உண்மையில், அது குற்றமற்ற ( எபி. 8:7-8 ) ஒரு உடன்படிக்கையின் கீழ் இருப்பதால், இதன் முக்கியத்துவம் அதிகமாகிறது. இது ஒரு நிலையற்ற உடன்படிக்கை அல்ல, இது நித்தியமானது ( எபி. 13:20 ). 2 கொரிந்தியர் 1:20-ல் அப்போஸ்தலனாகிய பவுல் கூறியுள்ள கூற்றை எபிரேயர் புத்தகம் மிக விரிவாக விளக்குகிறது: “தேவனுடைய வாக்குத்தத்தங்கள் யாவும் அவரில் ஆம் என்று நிறைவேறுகின்றன.” கிருபையின் ஒரே உடன்படிக்கை, அதன் பல்வேறு நிர்வாகங்களுடன், கிறிஸ்துவின் வருகையால் மலர்ந்துள்ளது. எபிரேயர் புத்தகத்தைப் பொறுத்தவரை, இது எல்லாவற்றையும் மாற்றுகிறது. நீங்கள் எபிரேயர் புத்தகத்தைப் படிக்கும்போது, புதிய உடன்படிக்கையின் மகிமைகளைக் கவனியுங்கள்.
2. கிறிஸ்துயியலைப் புரிந்துக் கொள்வதற்கு எபிரெயர் புத்தகம் முக்கியமானது.
புதிய உடன்படிக்கை அதன் மத்தியஸ்தரால் மிகவும் மகிமை வாய்ந்ததாக இருக்கிறது. தேவனுடைய கிருபையின் உடன்படிக்கையின் ஆசீர்வாதங்களை அனுபவிக்க எப்போதும்போல விசுவாசம் அவசியம் என்றால், அந்த விசுவாசத்தின் இலக்கு, நமது விசுவாசத்தை விருப்பத்தோடு சுமப்பவராக இருக்கவேண்டும். எபிரேயர் புத்தகம், ஒவ்வொரு பழைய உடன்படிக்கையின் நிழலுக்கும் சாரமாகவும், நமது விசுவாசம் மற்றும் ஆராதனையின் மேலான இலக்காகவும் கிறிஸ்துவின் மேன்மையை சந்தேகத்திற்கு இடமின்றி நிலைநாட்டுகிறது.
எபிரெயர் நிருபம் கிறிஸ்துவை ஓர் சாதாரண மனிதனாக காண்பிக்கவில்லை. அவர் தேவனுடைய மகிமையின் பிரகாசம், அவருடைய தன்மையின் சொரூபம் (எபி 1:3), தமது வல்லமையுள்ள வசனத்தினால் சர்வத்தையும் தாங்குகிறவர். அவர் நித்திய குமாரன், தூதர்களைக் காட்டிலும் பெரியவர், மோசேயைக் காட்டிலும் பெரியவர், ஒரே தரம் தெரிந்துக்கொள்ளப்பட்ட எல்லாருக்காகவும் தம்மைத்தாமே பலி செலுத்தின மகத்துவமான பிரதான ஆசாரியர். தேவதூதர்கள் முதல், பழைய உடன்படிக்கையில் கர்த்தர் ஏற்படுத்திய தீர்க்கதரிசிகள், ஆசாரியர்கள், ராஜாக்கள் போன்ற மகிமையான பதவிகள் வரை எல்லாவற்றிலும் அவர் மேலானவர்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே புதிய உடன்படிக்கையின் சாராம்சம்; நாம் பார்த்தபடி, அது பழைய உடன்படிக்கையை விட மேலான உடன்படிக்கையாகும் ( எபி. 7:22 ). கிறிஸ்தவ வாழ்வு வெற்றுநிறைந்த வாழ்வு அல்ல என்பதை எபிரெயர் கூறுகிறது. அவரோடு உள்ள மேன்மையான ஐக்கியத்திலிருந்து வெளிப்படும் அசைக்கமுடியாத உறுதியான உடன்படிக்கையின் பற்றுறுதியாகும். ஆகையால், அவரே நமது அன்பின் நோக்கமாகவும், நம்பிக்கையின் நங்கூரமாகவும், விசுவாசத்தின் இலக்காகவும் இருக்கிறார். நீங்கள் எபிரெயர் நிருபத்தை வாசிக்கையில் கிறிஸ்துவின் மகிமையைக் காணுங்கள்.
3. திருச்சபையியலைப் புரிந்துக் கொள்ள எபிரெயர் முக்கியமானது.
எபிரெய நிருபத்தின் கிறிஸ்துயியல் மற்றும் உடன்படிக்கை சார்ந்த சத்தியங்கள் போல இதில் சொல்லப்பட்ட திருச்சபையியலின் உபதேசங்கள் நவீன வாசகர்களுக்கு வெளிப்படையாக தெரியாவிட்டாலும், இது மிகவும் அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என்பதை ஆசிரியர் விளக்குகிறார். எபிரேயர் நூலின் ஆசிரியர், வனாந்தரத் தலைமுறையை வெறுமனே ஒரு வரலாற்று செய்தியாக கூறாமல், அந்த வனாந்தரச் சூழலுக்குள் திருச்சபையின் இருப்பையும் அடையாளத்தையும் அவர் சுட்டிக் காட்டுகிறார். இந்த அடையாளம் உருவகமானது அல்ல; மாதிரியில். அதாவது, இன்று உள்ள திருச்சபை வெறுமனே வனாந்திரத்தில் இருந்த இஸ்ரவேல் போல மட்டும் அல்லாமல், உண்மையில், அந்த பிரயாண மக்களின் தொடர்ச்சியாகவே, புதிய உடன்படிக்கையின் கீழ் திருச்சபை விளங்குகிறது.
பிரயாண மக்களின் காட்சியை எபிரெயர் சித்தரிக்கிறது: ‘நிலையான நகரம் நமக்கு இங்கே இல்லை. வரப்போகிறதையே நாடித் தேடுகிறோம்.” (எபிரேயர் 13:14). பழைய உடன்படிக்கையின் சடங்குகளுக்கு திரும்பிச் செல்வதற்கு சோதிக்கப்படும் எபிரெய மக்களை தங்களது உண்மையான பரலோக வீட்டிற்கு செல்லும் வழியில் பரதேசிகளாக நிலைத்திருக்குமாறு ஆசிரியர் வலியுறுத்துகிறார். இந்தத் திருச்சபை சார்ந்த காட்சிகள் 3 மற்றும் 4 ஆம் அதிகாரங்களில் இருப்பதை விட வேறு எங்கும் தெளிவாக இல்லை. வனாந்தரத்தில் இருந்தது போல ( எபி. 3:7-8 ) தங்கள் இருதயத்தைக் கடினப்படுத்த வேண்டாம் என்று திருச்சபை எச்சரிக்கப்படுகிறது. அந்தத் தலைமுறை அவிசுவாசத்தின் காரணமாக வனாந்தரத்தில் மரித்தது. எபிரெய நிருபமும் கடுமையான எச்சரிப்புகளோடு, அதே அளவு உந்துதலையும் திருச்சபைக்கு அளிக்கிறது. தேவனுடைய இளைப்பாறுதலில் பிரவேசிக்கும் வாக்குத்தத்தம் நிலைத்திருக்கிறது ( எபி. 4:1 ), அந்த இளைப்பாறுதல் நமது பலவீனத்தில் பரிவைக் காட்டும் நமது மகா பிரதான ஆசாரியராகிய கிறிஸ்துவில் காணப்படுகிறது ( எபி. 4:15 ). அப்படியானால், திருச்சபை என்பது சகிப்புத்தன்மை, ஆராதனை மற்றும் எதிர்காலத்தை நோக்கிய நம்பிக்கை ஆகியவற்றால் குறிக்கப்படும் ஒரு உடன்படிக்கை சமூகமாகும். அது வனாந்தரத்தில் கிறிஸ்துவைச் சுற்றி கூடிவந்து, அவருடைய வார்த்தையால் போஷிக்கப்பட்டு, பரலோக எருசலேமை நோக்கி முன்னேறுகிறது.
ஆனால் நாம் இன்னும் ஆழமாகச் செல்ல வேண்டும். எபிரேயர் புத்தகம், வேதம் முழுவதிலும் உள்ள பரலோக ஆராதனையின் மிக கம்பீரமான தரிசனங்களில் ஒன்றையும் நமக்குத் தருகிறது,இதுவும் நமது திருச்சபையியலுக்கு வழிகாட்டுகிறது. 12 ஆம் அதிகாரத்தில், நூலாசிரியர் சீனாய் மலைக்கும் சீயோன் மலைக்கும் இடையிலான வேறுபாட்டை அதன் உச்சக்கட்டத்திற்குக் கொண்டு செல்கிறார். நாம் சீனாயின் பயங்கரங்களுக்கு வரவில்லை, ஆனால் சீயோனுக்கு, அதாவது “ஜீவனுள்ள தேவனுடைய நகரமாகிய பரலோக எருசலேமுக்கு” வந்திருக்கிறோம் என்று அவர் கூறுகிறார். அங்கே நம்முடன் யார் இருக்கிறார்கள்? “பண்டிகைக் கூட்டத்தில் திரளான தூதர்கள்,” “முதற்பேறானவர்களின் சபை,” “எல்லாவற்றையும் நியாயந்தீர்க்கும் தேவன்,” மற்றும் “புதிய உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசு” ( எபி. 12:22-24 ). இது வெறும் எதிர்கால தரிசனம் அல்ல. இது ஒரு நிகழ்கால யதார்த்தம். திருச்சபை ஒவ்வொரு முறையும் ஆராதனைக்காகக் கூடும்போது இந்த பரலோக சபையை மாதிரியாக பிரதிபலிக்கிறது. போராடுகிற சபை, வெற்றிபெற்ற சபையுடன் இணைந்து, நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தில் வேரூன்றிய ஒரு உடன்படிக்கையின் மாதிரியில் ஈடுபடுகிறது ( எபி. 13:20 ). நீங்கள் எபிரேயர் புத்தகத்தை வாசிக்கும்போது, சபையின் மகிமையைக் கவனியுங்கள்.
இந்த மூன்று கருப்பொருள்களைக் கருத்தில் கொண்டு எபிரேயர் புத்தகத்தை வாசிப்பது, இந்தப் புத்தகத்தின் செய்தியைப் புரிந்துகொள்ள உதவுவதோடு மட்டுமல்லாமல், மற்ற அறுபத்தைந்து புத்தகங்களின் செய்தியையும் புரிந்துகொள்ள நமக்கு உதவும்.
இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.


